மணமகன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. மணமகளோ டாக்டர். இவர்களது திருமணம் இரு தினங்களுக்கு முன், அதாவது பிப்.26 அன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் சுவாரஸ்யமாக பேசப்பட்டது, ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் மணமகளிடம் கேட்ட வரதட்சணைதான்! இதைக் கேட்டு மணமகள் அதிர்ந்து விட்டாராம்! மணமகள் அதிரும் வகையில், அப்படி என்ன கேட்டுவிட்டார் அவர்?
பிப்.26 அன்று, பேராவூரணியில் நடைபெற்றது, திருநெல்வேலி துணை ஆட்சியராக இருக்கும் சிவகுரு பிரபாகரன் திருமணம்.
இவர், பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல சிரமங்களுக்கு இடையே ஐஏஎஸ் அதிகாரியானவர். தான் ஐஏஎஸ் முடித்த பிறகே திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தாராம்! அவருக்கு படித்த பெண்கள் IAS, IPS, IRS என பதவியில் இருக்கும் தகுந்த பெண்கள் மணமகளாய் வரத் தயாராக இருந்தும், தாம் ஒரு மருத்துவரையே திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தாராம்!
எனவே தனது மகனின் உறுதிக்கு ஏற்ப, அவர் பெற்றோரும் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாகத் தேடி வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கு தகுந்த பெண் கிடைத்த நிலையில், இவரது நிபந்தனைகளைக் கேட்டதும், அந்தப் பெண்கள் மறுத்து ஓட்டம் பிடித்தனராம்.
இந்தத் தேடலில், கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரி கணித பேராசிரியரின் மகள் Dr கிருஷ்ணபாரதி MBBS இந்தத் திருமணத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதை அடுத்து, திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில், பிப்.26 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் ஆச்சரியம் என்ன என்றால், அவருடைய நிபந்தனையை இந்தப் பெண் ஏற்றுக் கொண்டது தான்! அப்படி என்ன நிபந்தனை என்கிறீர்களா?
தன்னை திருமணம் செய்துகொள்ளும் மருத்துவர் வாரத்தில் இரண்டு நாள் தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்திற்கும் சுற்றியிருக்கும் கிராமத்திற்கும் இலவசமாய் மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே! இந்த நிபந்தனையே தனக்கான வரதட்சணை என்று இவர் கேட்டுள்ளார்.
இந்த நிபந்தனைக்காகவே இவரது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டிருந்ததாகவும், தற்போது இவர் கேட்ட வரதட்சணையை ஏற்றுக் கொண்டு, மணமகள் திருமதி கிருஷ்ண பாரதி சிவகுரு பிரபாகரன் என ஆகி உள்ளார் என்றும் திருமண வீட்டில் மகிழ்ச்சியுடன் பலரும் கதைத்துக் கொண்டிருந்தனர்.