வெந்தயக்கீரை வாழைப்பூ சாம்பார்
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ – ஒரு மடல்,
வெந்தயக்கீரை – சிறிய கட்டு 2, பாசிப்பருப்பு – 100 கிராம்
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
மல்லி (தனியா) கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – ஒன்று பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு .
தாளிக்க:
கடுகு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் குழைய வேகவைத்து எடுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மல்லி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து எடுக்கவும். இதனுடன் தேங்காய்த் துருவல், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வெந்தயக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கி சிறிதளவு எண்ணெய்விட்டு வதக்கிக்கொள்ளவும். வாழைப்பூவையும் ஆய்ந்து நறுக்கி எண்ணெய்விட்டு வதக்கி வைக்கவும்.
அரை லிட்டர் தண்ணீரில் புளியை நன்கு கரைத்து அதனுடன் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை கொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கிய வெந்தயக்கீரை, வாழைப்பூவைச் சேர்க்கவும். பின்னர் இதனுடன் அரைத்த விழுது, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கலக்கவும். மற்றொரு வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து, அதைக் கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
குறிப்பு: சிறிது கசப்பான வெந்தயக்கீரையையும் துவர்ப்பான வாழைப்பூவையும் சேர்த்து சாம்பார் தயாரித்தால் வயிற்றுக்கு மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைச் சற்றுக் குறைத்துப்போட்டு சாம்பார் தயாரிக்கலாம்.