வரகு காரப்பொங்கல்
தேவையான பொருட்கள்:
வரகு – 200 கிராம்,
கொள்ளு அல்லது காராமணி – 50 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று,
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு,
கேரட் துருவல், தேங்காய்த் துருவல் – தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
நெய், எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
கொள்ளு அல்லது காராமணியை அரை மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேகவைத்து மூன்று விசில்விட்டு இறக்கவும். வரகை 20 நிமிடங்கள் ஊறவிட்டுக் களைந்து வைக்கவும். பிறகு குக்கரை அடுப்பில் ஏற்றி சிறிதளவு நெய் மற்றும் எண்ணெய்விட்டு சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் கேரட் துருவல், தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு வரகுக்கு மூன்று பங்கு என்கிற அளவில் தண்ணீர் சேர்த்து, தேவையான உப்பை இதனுடன் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது வரகு, வேகவைத்த கொள்ளு (அ) காராமணியைச் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும். வரகு காரப் பொங்கல் தயார்.