![விரைவில் இன்ஸ்டாவில் NFT: மார்க் அறிவிப்பு! 1 Instagram](https://dhinasari.com/wp-content/uploads/2022/01/Instagram.jpg)
பிரபல சோசியல் மீடியாவான இன்ஸ்டாகிராமில் NFT விற்பனையை விரைவில் துவங்க இருப்பதாக மெட்டா குழுமத்தின் தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
மெட்டா குழுமத்தின் தலைமையின் கீழ் இயங்கிவரும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிரும் இந்த அப்ளிகேஷனில் NFT எனப்படும் Non Fungible Token ஐ விற்பனை செய்ய இருப்பதாக மெட்டா குழும தலைவர் மார்க் தெரிவித்து இருக்கிறார்.
இணைய உலகில் தற்போது வைரலாக பேசப்படும் விஷயம் இந்த NFT. உதாரணமாக நீங்கள் ஒரு படம் வரைகிறீர்கள். அதனை உங்களது வீட்டில் மாட்டுகிறீர்கள்.
உங்களுடைய புகைப்படத்தை போலவே உங்களது நண்பர் ஒருவர் வரைந்து விற்பனை செய்கிறார். ஆனால், அந்த ஓவியத்தின் உண்மையான உரிமையாளர் நீங்கள் தானே? இது பார்ப்பதற்கு எளிமையான விஷயம் போல தோன்றலாம்.
ஆனால், இணையத்தில் கோடிக்கணக்கான புகைப்படங்கள் உள்ளன. அவற்றின் உரிமையாளர் யார் என்பதை கண்டறிய நாம் மிகவும் சிரமப்பட வேண்டும்.
இதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்த NFT தொழில்நுட்பம். இதன் மூலம் புகைப்படங்களை (உதாரணத்திற்கு) டிஜிட்டல் முறையில் உருவாக்கலாம். அதனை விற்பனையும் செய்யலாம்.
இது குறித்துப் பேசிய மார்க்,” NFT க்களை இன்ஸ்டாகிராமிற்கு விரைவில் கொண்டு வருவதில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
தற்போது அந்தத் திட்டம் குறித்து முழுமையாக என்னால் கூற இயலாது. ஆனால், விரைவில் இன்ஸ்டாகிராமில் மக்கள் தங்களது NFT விற்பனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.
சமீபத்தில் டிவிட்டர் நிர்வாகம் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு NFT புகைப்படங்களை புரொஃபைல் படமாக வைக்க அனுமதி கொடுத்துள்ளது.
அதேபோல, இந்தியாவைச் சேர்ந்த பயண முன்பதிவு நிறுவனமான ‘மேக் மை ட்ரிப்’ நிறுவனமும் வாடிக்கையாளர்கள் தங்களது NFT மூலமாக பயண முன்பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமிலும் NFT களை விற்பனை செய்யலாம் என அந்த நிறுவன தலைவர் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்து இருப்பது இணையவாசிகளை குஷிப்படுத்தி உள்ளது.