கார்த்திக்கும், அவரது மகன் கவுதம் கார்த்திக்கும் ‘மிஸ்டர் சந்திரமௌலி’ என்ற படத்தில் தந்தை-மகனாகவே இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்தப் படம் தொடர்பாக, நடிகர் கார்த்திக் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை:-
ரஜினி கமல் இருவரும் அரசியலுக்கு வந்ததை வரவேற்கிறேன். அவர்களும் பகுதி நேர அரசியலில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் முழு நேர அரசியல்வாதியாக மாறவேண்டும். சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும்.
இதுவரை நான் பகுதி நேர அரசியல்வாதியாகவே இருந்தேன். முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை. சமீப காலமாக நான் அரசியலை விட்டு விலகியே இருந்தேன். அதற்குக் காரணம் சில விரும்பத்தகாத சம்பவங்கள் தான்! இனி, நான் முழு நேர அரசியல்வாதியாக மாறுவேன். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நான் என் அப்பா முத்துராமனுடன் இணைந்து நடிக்க ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறவில்லை. ஆனால் என் மகன் கௌதம் கார்த்திக் என்னுடன் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவனுடைய ஆசை நிறைவேறி இருக்கிறது.
கௌதம் கார்த்திக்குடன் நான் இணைந்து நடித்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து நடித்த ‘மிஸ்டர் சந்திரமவுலி’ விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் மிகப் பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சினிமாவில் இப்போதுள்ள இளைஞர்கள் கடினமாக உழைக்கிறார்கள். திறமையாக நடிக்கிறார்கள். கௌதம் கார்த்திக்கும் சிறந்த நடிகர் என்பதை நிரூபித்துவிட்டான் என்று கூறினார்.




