குமராட்சியை அடுத்த திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள்
குருபூஜை நடைபெற்றது.
ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை தொன்று தொட்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று 29-05-2017 திங்கள்கிழமை காலை சிவபூஜையுடன் தொடங்கி ஸ்ரீ கணபதி ஹோமம்,ஆலயத்தில் உள்ள அனைத்து மூர்த்தங்களுக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் மதியம் அன்னதானமும் நடைபெற்றது
காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் ஸ்ரீபொல்லாப் பிள்ளையார்
கோயிலில் நம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா, திருமுறை ரத்தினம் விருது
வழங்கும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருப்பனந்தாள் காசி மட கிருஷ்ணகிரி பெ.கு.வரதராஜன் அறக்கட்டளை,
ஸ்ரீபொல்லாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் இணைந்து நடத்திய இந்த விழாவில், அன்னதான டிரஸ்ட் நிறுவனச் செயலர் உ.வெங்கடேச தீட்சிதர் வரவேற்றார்.
ஸ்ரீகுருஞானசம்பந்தர் பணி மன்றத் தலைவர் கு.சேதுசுப்பிரமணியன் விளக்கவுரை ஆற்றினார்.
சிதம்பரம் ஸ்ரீமௌன மட ஸ்ரீமௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் முன்னிலை
வகித்துப் பேசினார். விழாவில் சிறகிழந்தநல்லூர் ரா.செந்தில்குமார்
எழுதிய, தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள் கையேட்டின் 2-ஆம் பதிப்பை
செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை சென்னை என்.சிவக்குமார் பெற்றுக் கொண்டார்.
திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி
தம்பிரான் தலைமை வகித்து, நம்பியாண்டார் நம்பி விருதாகிய திருமுறை
ரத்தினம் விருதை, திருச்சி திருமுறை மன்றப் பொருளாளர்
கே.சி.என்.மாணிக்கவாசகத்துக்கு வழங்கினார்.
விழாவில் திருவாவடுதுறை கட்டளைத் தம்பிரான் அம்பலவாண தேசிக சுவாமிகள், செங்கோல் ஆதீனம் ஸ்ரீசிவப்பிரகாச தேசிக சத்தியஞான பராமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் அதிபர் ஸ்ரீமுத்துக்குமாரசாமி தம்பிரான், மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் உள்ளிட்டோர் ஆசியுரை ஆற்றினர். தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மைய உதவிப் பொறியாளர் சி.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
குருபூஜையை முன்னிட்டு பொல்லாப்பிள்ளையார் கோயிலில் திங்கள்கிழமை காலை சிவபூஜையுடன் தொடங்கி கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அன்னதானம் வழங்கப்பட்டது.
News: U. Venkatesan