
- ஜெயஸ்ரீ சாரி
கவிமாமணி இளையவன், அரிமா எஸ். கிருத்திவாசன் பற்றி எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூல் வெளியீட்டு விழா, இலக்கியச் சாரல் காலாண்டு இதழ் வெளியீட்டு விழா ஆகியவை, ‘நிறை இலக்கிய வட்ட’த்தின் தலைவர் ஸ்ரீநிவாஸனின் இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ‘இலக்கியச் சாரல்’ அமைப்பின் காவியக் கன்றுகளின் உற்சாகமான பங்களிப்பு, நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பெரிதும் கவர்ந்தது.
இந்நிகழ்ச்சியில் சீதாலெக்ஷ்மி வரவேற்புரை ஆற்றினார். சிறுமி இமிழிசை காத்யாயினி இறை வணக்கம் பாடினார். சிறுவர்கள் லவன் , குசன் இருவரும் தமிழ் மொழியின் பெருமையை பேச்சுக் கலை மூலம் உணர்த்திய விதம் நிகழ்ச்சிக்கு மணி மகுடமாய் அமைந்தது. சிறுமி க. திவாஷிணி, அப்துல்கலாம் குறித்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
சிறுவன் க. கிரித்விக் திருக்குறள் சொல்ல, சாய் அபிராமி ஆத்திசூடி, பாரதியார் பாடல்களைச் சொன்னார். சிறுவன் ஷாஷ்வத் முகுந்தன் ஜிம்னாஸ்டிக் செய்து காட்டினார். சிறுவர்கள் ஷாஷ்வத், யுவனேஷ், சிறுமி பைரவி ஆகியோர் தங்களது அறிவியல் ப்ராஜெக்டுகளை செய்து காட்டினர்.
சிறுவன் அத்வைத் மழைநீர் சேகரிப்பு குறித்த கவிதையைச் சொல்லியும் திருப்புகழ் பாடியும் அசத்தினார். சிறுமி அதிதி, கந்தர் அனுபூதி பாடல்களைப் பாடினார். மேலும், புத்தகம் படிக்கும் பழக்கம் வளர வேண்டும் என்று சொல்லி, தனக்கு ஏற்பட்ட கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தால், தான் விரும்பிப் படித்த எழுத்தாளர் மாயூரனின் கதையை சுவைபட எடுத்துரைத்தார். இப்படி இலக்கியச் சாரலின் காவியக் கன்றுகள் அருமையாய் தங்களது திறமைகளை வெளிபடுத்தினார்கள்.
கம்ப ராமாயணத்தில் விபீஷணன் சரணாகதி பற்றிய உரையை கோகுல் ராம் நிகழ்த்த, அது நிகழ்ச்சிக்கு ஒரு மணி மகுடமாகத் திகழ்ந்தது.
பின்னர் இளையவன் எழுதிய ‘வரலாறு படைத்த வள்ளல்’ நூலை ஈசநேசன் மகஸ்ரீ வெளியிட, திவாகர் கிருத்திவாசன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் இளையவன் ஏற்புரை வழங்கினார்.
தொடர்ந்து, இலக்கியச்சாரல் காலாண்டு இதழை ஸ்ரீநிவாஸன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து இந்நிகழ்ச்சிக்காகவே வந்திருந்த ஶ்ரீ அறம் அறக்கட்டளை நிறுவனர் சாய் ஈஸ்வரி, எழுத்தாளர் இன்பா ஆகியோர் உரையாற்றினர்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஆசிரியர்கள் பங்கேற்கவும், அவர்களின் செயல்களுக்கு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த இலக்கியச் சாரல் அமைப்பின் மூத்த உறுப்பினர் குச்சனூர் டி. கோவிந்தராஜனுக்கு பாராட்டு மடல் அளித்து இளையவன் கௌரவித்தார்.
இலக்கியச் சாரல் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுந்தர மகாலிங்கம், முன்னாள் தலைவர் நாகராஜன், விஜயலெக்ஷ்மி நாராயணன், பாமா ரவி, பெற்றோர்கள், இலக்கிய ஆர்வலர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இலக்கியச் சாரல் ஆசிரியர் ரெ.முரளி மற்றும் ஆங்கில இதழ் ஆசிரியர் ஜெயஶ்ரீ சாரி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர். ஜானகி குமரேசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, ரேவதி ஸ்ரீநிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார்.
வாழிய செந்தமிழ் பாடலுடன் விழா நிறைவுற்றது. வந்திருந்த அனைவருக்கும் நிறை இலக்கிய வட்ட தலைவர் சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் இரவு உணவு அளித்து மரியாதை செய்தனர்.



