அமைச்சர் ஜெயக்குமார், கூவத்தை சுத்தப்படுத்த அயல்நாடு சென்ற ஸ்டாலினும் மா சுப்பிரமணியனும் என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் மீன்பிடி துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல்வர் தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வந்துள்ளார். இன்னும் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வர இருக்கிறது.
இந்நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் ஈர்ப்பு என்பதை திறந்த மனதோடு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் பாராட்ட வேண்டும். ஸ்டாலின் பாராட்டு விழா நடத்துவார் என நம்புகிறேன்.
அதிமுக ஆட்சியில் தான் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் வந்துள்ள நிலையில், ஸ்டாலின் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்க வசதியாக இருக்கும் என்றார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியின் போது கூவத்தை சுத்தப்படுத்த மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியனும் வெளிநாடு சென்று வந்தார்களே? அதனால் கூவம் சுத்தமாகி விட்டதா? என்று கேள்வியெழுப்பிய ஜெயகுமார், ஸ்டாலினின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து அறிக்கை அளிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.