தமிழகத்தில் வரும் நவம்பர் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தெரிகிறது. இது குறித்த தகவலை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தல் எப்போது நடக்கும் என்று பலரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், கடந்த சில வருடங்களாக, உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் இல்லாமல், அரசுத் துறைகள் மூலமே உள்ளாட்சி நிர்வாகம் நடைபெறுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல்களால், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தல்களில் மாநில அரசு சுணக்கம் காட்டி வந்தது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நீதிமன்றத்தில் திமுக., தரப்பில் தொடரப்பட்ட வழக்கு அதற்கு தடையாக இருந்தது என்று கூறப்பட்டது.
இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தற்போது நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அதிகாரப்பூர்வ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட வார்டு வரையறை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
சிவகங்கையைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தாக்கல் செய்த மனுவில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவினை பிறப்பித்திருக்கிறது .