பாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினி முதல்வராவார் என எஸ் வி சேகர் பேசியுள்ளார்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னையில் அவரது ரசிகர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
இந்த நிலையில் அவரோ வரும் 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதுதான் கட்சியை தொடங்குவேன் என கூறி வருகிறார். அப்போது 234 தொகுதிகளில் தனித்து போட்டி என்றும் அவரது இலக்கு 234 என்றும் கூறி வருகிறார்.
அரசியலில் ஆர்வம் இல்லை என சொல்லிக் கொண்டிருந்த கமல் கட்சியை தொடங்கி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றுவிட்டார். ஆனால் ரஜினி இன்னும் கட்சியையே தொடங்கவில்லை.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்த அடையாறுக்கு வந்திருந்த எஸ் வி சேகரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர்.
அவர் கூறுகையில் ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலில் வரும் தேர்தலில் பங்கெடுப்பார். அவர் தமிழகத்தின் முதல்வராவார். யார் நிறைய தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே முதல்வராவர். அவர் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
நிச்சயம் அவர் வெற்றி பெற்று முதல்வராவார். பாஜகவின் தயவின்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எனவே தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் ரஜினி வெற்றி பெறுவார் என்றார் எஸ் வி சேகர்.