குழந்தை அழுது கொண்டே இருந்ததால் எரிச்சல் அடைந்துள்ளார் அக்குழந்தையின் தாய் பவித்ரா. அதானால் துப்பட்டாவால் குழந்தையின் வாயைப் பொத்தி அழுகையை நிறுத்தி உள்ளார்.. ஆனால் பரிதாபம்… அந்தக் குழந்தையின் மூச்சே நின்றுவிட்டது!
நெஞ்சை பதைபதைக்க வைத்த இந்தச் சம்பவம் வேலூர் அருகே வாலாஜாபேட்டையில் நடந்துள்ளது.
வாலாஜாபேட்டையை அடுத்த திரௌபதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா (22) இவருக்கு கௌரிசங்கர் என்பவருடன் 4 வருடத்துக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ரம்யா என்ற 3 வயது குழந்தையும், மௌலிகா என்ற ஒன்றரை வயதுக் குழந்தையும் உள்ளனர்.
இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரைவிட்டுப் பிரிந்து, தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் பவித்ரா. காஞ்சிபுரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்த பவித்ரா, கடந்த இரு தினங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, இரவு நேரத்தில் சிறிய குழந்தை மௌனிகா அழுது கொண்டே இருந்ததாம். அதனை சமாதானப் படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும், பவித்ராவால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் கடும் எரிச்சல் அடைந்த பவித்ரா, துப்பட்டாவால் குழந்தையின் வாயில் அடைத்துப் பொத்தியிருக்கிறார்.
ஆனால், துப்பட்டா துணி வாயில் சிக்கி குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அப்படியே மயங்கி விழுந்துள்ளது. இதனால் பயந்த பவித்ரா, குழந்தையை தூக்கிக்கொண்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். ஆனால் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த வாலாஜா போலீசார், பவித்ராவிடம் நடத்திய விசாரணையில், குழந்தை அழுது கொண்டே இருந்தது தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், அதன் வாயைப் பொத்தியதாகவும், ஆனால் இப்படி ஆகும் என்று தாம் நினைக்கவில்லை என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
இதை அடுத்து போலீஸார், பவித்ராவை கைது செய்துள்ளனர்.