திருச்சியில் பாலக்கரை பாஜக பகுதி செயலாளர் விஜய்ரகு இன்று காலை பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலரால் படுகொலை செய்யப் பட்டுள்ளதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கடந்த மாதம் இஸ்லாமியர்கள் நடத்திய பேரணியின் போது காந்தி மார்க்கெட் பகுதியில், கடைகளை அடைக்கக் கூறி அங்குள்ள வியாபாரிகளை அவர்கள் மிரட்டினர். அப்போது, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக கடைகள் திறந்திருக்க வேண்டும் என்று பிரசாரம் செய்து, தீவிரமாக செயல்பட்டார் விஜய்ரகு என்கின்றனர் பாஜக.வினர்.
அவ்வாறு, சிஏஏ சட்டத்தை ஆதரித்து செயலாற்றிய காரணத்தினாலும், குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மிகவும் துடிப்புடன் பங்குபெற்றதனாலும், இஸ்லாமிய பயங்கரவாதிகளால் அவர் மிரட்டப்பட்டு வந்ததாகக் கூறுகின்றனர் பாஜக.,வினர்.
இந்நிலையில் இன்று காலை திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் அவரை சில இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெட்டிப் படுகொலை செய்துள்ளதாகவும், இது திருச்சியில் பயங்கரவாதத்தின் கோரக் கரங்கள் நீண்டிருப்பதையே காட்டுவதாகவும் உள்ளம் குமுறுகின்றனர் உள்ளூர் மக்கள்.
திருச்சி பாலக்கரை பகுதி பாஜக., செயலர் விஜய் ரகு படுகொலையால், திருச்சியில் உச்சபட்ச பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சம்பவம் குறித்து பாஜக., தமிழக தலைவர்கள் தங்கள் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சிபி.ராதாகிருஷ்ணன் திருச்சிக்கு வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டு, இந்தப் பயங்கரவாதச் செயலுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். தொடர்ந்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து பாஜக.,வினர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்ததுடன், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்திய பாஜக.,வினர், திருச்சி காந்தி மார்க்கெட்டை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஏற்கெனவே மணிகண்டம் பகுதியில் மார்க்கெட் கட்டப் பட்டுள்ளது என்றும், அங்கே இதனை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரினர்.
திருச்சி மார்க்கெட், மரக்கடை, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகம் இருப்பதாகக் கூறும் அவர்கள், நகரின் மையத்தில் இருந்து கொண்டு ஏதாவது ஒரு சிறு சம்பவம் என்றாலும் அங்குள்ள அனைத்து முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி அமைதியைக் குலைத்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு முக்கியக் காரணமாக காந்தி மார்க்கெட் மற்றும் பழைய இரும்பு கடைகள் இருப்பதாகவும், இவற்றை இந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக அரசு இதனைச் செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாகவும், இதற்கு முட்டுக்கட்டையாக திமுக மாவட்ட செயலாளர் நேரு மற்றும் ஆளும் கட்சி திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் இருப்பதாகவும் கூறும் பாஜக.,வினர், அமைதியின்மை மற்றும் பதற்றத்தில் ஆழ்த்தும் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்து மாநில அரசு மெத்தனமாக இருந்தால், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் இந்த ஆட்சியைக் கலைக்குமாறு மத்திய அரசைத்தான் வலியுறுத்த வேண்டும் என்று உள்ளம் குமுறி வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.