கோவை மாவட்டத்தில் , செல்வபுரம் போலீசார் உக்கடம் -செல்வபுரம் பைபாஸ் சாலையில் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு உள்ள பூங்கா ஒன்றில் 5 பேர் அடங்கிய கும்பல் பதுங்கி இருந்தது.
அவர்களிடம் போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது அந்த கும்பல் அரிவாளை காட்டி போலீசாரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அப்போது செல்வபுரம் பகுதியில் கொள்ளையடிக்கும் திட்டத்தில் அங்கு பதுங்கி இருந்தது தெரிய வந்தது. மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் கோவைப்பூதுரை சேர்ந்த செந்தில் குமார் ( 51), கரும்புக்கடை பகுதியை சேர்ந்த உமர் பாரூக் ( 31), குனியமுதூரை சேர்ந்த ஷாஜகான் ( 42), செல்வபுரத்தை சேர்ந்த மாரியப்பன் ( 42), போத்தனூரை சேர்ந்த கபீர் ( 43) என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில், செந்தில்குமார் மற்றும் ஷாஜகான் ஆகியோர் மீது கோவை நகரம், புற நகரம், திருப்பூர் மற்றும் கேரளாவில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.