பூட்டாமல் போன 2வீலர்! ஏடிஎம் கார்டை திருடி ரூ 1 லட்சம் அபேஸ்!

atm

சென்னை அடையாறில் ஏ.டி.எம் கார்டை திருடி அதன்மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்து 1 லட்சம் ரூபாய் வரை சாதூர்யமாக கொள்ளையடித்த நபரை காவல்துறையினர் சி.சி.டி.வி உதவியுடன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை அடையாறில் உள்ள பிரபல துணிக்கடையில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரியும் பெண் ஒருவர் கடந்த 2 ஆம் தேதி தனது அலுவல் பணிக்கு வரும்போது தனது இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் தனது ஏ.டி.எம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் இதர ஆவணங்களை வைத்துவிட்டு அவரசத்தில் சரியாக பூட்டாமல் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் பணியில் இருந்தபோது மாலை 3 மணியளவில் மொபைலுக்கு தனது கணக்கில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் வரை பணம் எடுக்கப்பட்டதாக தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் இச்சம்பவம் தொடர்பாக அடையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.விக்களை ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் குரோம்பேட்டை நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த முகமது இம்ரான் என்பவர்தான் குற்றவாளி என்றறிந்த காவல்துறையினர் அவரை உடனடியாக கைது செய்தனர். மேலும், பின் நம்பரின்றி (ATM PIN) எவ்வாறு பணத்தை ஏ.டி.எம் ல் இருந்து எடுத்தார் என்பது குறித்து விசாரித்தனர்.

ALSO READ:  முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!
bike
bike

விசாரணையில் முகமது இம்ரான் சரியாக பூட்டாமல் சென்ற பெண்ணின் ஏ.டி.எம் உள்ளிட்ட ஆவணங்களை கண்டதும் அதனை எடுத்துக்கொண்டு ஏ.டி.எம் சென்று வங்கிக் கணக்கு புத்தகத்திலிருந்த பழைய பின் நம்பரை வைத்து பணம் எடுக்க முயன்றதாகவும், அந்த பெண் Password ஐ மாற்றியிருந்ததால் பணம் வரவில்லை.

மேலும், என்ன செய்வது என தெரியாமல் இருந்த முகமது இம்ரான் அப்பெண்ணின் ஓட்டுநர் உரிமமும் அவரிடம் இருப்பதை உணர்ந்து அதிலிருந்த பிறந்த ஆண்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயன்றுள்ளார். அப்போது அதிர்ஷ்டவசமாக பெண்ணின் ஏ.டி.எம் password ஒத்துப்போனதால் பணத்தை எடுத்துவிட்டதாக முகமது இம்ரான் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்தார்.

முகமது இம்ரான் மீது ஏற்கனவே குரோம்பேட்டை காவல் நிலையத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் செயின் பறிப்பு, பூட்டிய வண்டியில் பூட்டை உடைத்து திருடுவது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை அடையாறு காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.