ஹைதராபாத் : ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு தினம்தோறும் 2 ஏர் இண்டியா விமானங்கள், 9 இன்டிகோ விமானங்கள், 3 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள், 4 ஸ்பைஸ் ஜெட் விமானங்கள், 3 க்ரூ ஜெட் விமானங்கள் உட்பட 20 விமான சேவைகள் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்ட ஹைதராபாத் விமான நிலைய அதிகாரிகள், ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும் விமானம் ஒன்றின் தண்ணீர் கேனில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தங்களுக்கு மிரட்டல் வந்துள்ளது என்று தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சென்னை விமான நிலைய அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர்கள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, சென்னை விமான நிலைய அதிகாரிகள் இது குறித்துக் கூறியபோது, ஹைதராபாத்தில் இருந்து வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, தாங்கள் முழுமையான முன்னெச்சரிக்கை மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறினர். இதையடுத்து சென்னை விமான நிலைய அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் சென்னை வருகின்றனர். எனவே, சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.