உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வெடிகள் வெடிப்பதற்கு உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளால் 75 சதவீத வெடிகள் விற்பனை ஆகாமல் தேங்கியதாக விற்பனையாளர்கள் கூறியுள்ளனர்.
தீபாவளி அன்று நிர்ணயிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. மேலும், அதிக மாசு வெளியிடக் கூடிய மற்றும் அதிக சத்தத்தை எழுப்பும் வெடிகளை வெடிக்கக் கூடாது என்று கூறியது.
வழக்கமாக சென்னையில் தீவுத்திடல், நந்தனம், கிழக்குக் கடற்கரைச் சாலை, ராயப்பேட்டை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள விற்பனை மையங்களில் அதிக அளவு விற்பனை இருக்கும். ஆனால் இந்த முறை, 25 சதவீத அளவே வெடிகள் விற்பனை ஆனதாம். 75 சதவீத வெடிகள் தேங்கின என்று விற்பனையாளர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 30 சதவீத வெடிகள் தான் விற்பனை ஆயினவாம். மீதம் 70 சதவீத வெடிகள் தேங்கிக் கிடக்கின்றன.
வெடிகள் தயாரிப்பு பெரும்பான்மையாக நடக்கும் விருதுநகர் மாவட்டத்தை அடுத்த மதுரை மாவட்டத்தில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பாதிக்கும் குறைவாகவே விற்பனை இருந்துள்ளது. மத்தாப்பு, புஸ்வாணம் போன்ற ஒளிரும் வெடிபொருள்களே விற்பனை ஆயினவாம். அதிக சத்தம் எழுப்பும் வெடிகளின் விற்பனை குறைந்துள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெடிகள் விற்பனை கடந்த ஆண்டை விட 90 சதவீதம் குறைந்துள்ளது என்று வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், வெடி தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், வணிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு வெடி வெடிக்க விதித்துள்ள கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று விருதுநகர் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.