ஊடகங்களில் நேற்று வெளியானது கருத்துக் கணிப்பு அல்ல கருத்து திணிப்பு; தமிழக நிலையைப் பத்தி மட்டும் என்கிட்ட கேளுங்க என்று பொரிந்து தள்ளினார் முதலமைச்சர் எடப்பாடியார்.
ஞாயிற்றுக் கிழமை நேற்று தேர்தலின் கடைசிக்கட்ட வாக்குப் பதிவு முடிந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிட்டனர்.
அதில், மத்தியில் மீண்டும் பாஜக., ஆட்சி வரும் என்றும், தமிழகத்தில் அதிமுக., கூட்டணிக்கு குறைவான இடங்களே கிடைக்கும் என்றும் கூறப் பட்டது.
இந்நிலையில், சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், தமிழகம், புதுவையில் அதிமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும்! சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும் என்றார்.
ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மாறுபட்ட முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதே என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், அவை கருத்து கணிப்புகள் அல்ல, கருத்து திணிப்புகள் என்றார்.
இருப்பினும், தேசிய அளவில் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே கருத்துக் கணிப்புகள் உள்ளனவே என்று செய்தியாளர்கள் அவரிடம் பதிலுக்குக் கேட்டனர். அதற்கு அவர், தாம் பேசுவது தமிழகத்தைப் பற்றி மட்டுமே என்றார்.
போதிய மழை இல்லாததால் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டுள்ளது என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருப்பினும் சூழ்நிலையைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.