சிறுவாச்சூர் பகுதியில் உள்ள கோயில்கள் சமூக விரோதிகளால் தொடர்ந்து தாக்கப்பட்டு சூறையாடப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
05.10.2021 இரவு சிறுவாச்சூர் மலைக்கோவிலான செல்லியம்மன் , பெரியசாமி கோவிலில் உள்ள சாமி சிலைகள் சேதப்படுத்தப் பட்டன. இது சதுரகிரி ,திருவண்ணாமலை போன்ற ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகும். சிறுவாச்சூர் பிரதான கோவிலில் உள்ள மதுரகாளியம்மன் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டுமே அந்த கோவிலில் இருப்பதாகவும் மற்ற நாட்களில் , இந்த மலைக்கோவிலில் இருப்பதாகவும் ஐதீகம். இயற்கை எழில் சூழ்ந்த அடர்ந்த வனத்தில் சிவன் சக்தி மற்றும் பெருமாள் பைரவர் உட்பட, அந்த மலையில் தவம் செய்த சித்தர்களின் இறை ரூபங்கள் உட்பட பலவும் இங்கு வீற்றிருக்கின்றன.
இதில் பல சிலைகள் , குறிப்பாக பெண் தெய்வங்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டிருந்தது.
ஒருநாள் கழித்து , 07.10.2021 இரவு பெரியாண்டவர் கோவில் சேதப்படுத்தப்பட்டது. புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட 22 நாட்களில், அந்த கோவிலின் எல்லா கற்சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன.
09.10.2021 அன்று தமிழக பாஜக மாநிலத்தலைவர் திரு. அண்ணாமலை அவர்களின், அறிவுறுத்தலுக்கு இணங்க நான் சிறுவாச்சூருக்கு சென்று
சேதப்படுத்தப்பட்ட கோவில்களை பார்வையிட்டு அந்த பகுதி மக்களையும் சந்தித்தேன். பெரம்பலூர் பாஜக மாவட்டத்தலைவர் சந்திரசேகர் உட்பட பெரம்பலூர் மாவட்ட பாஜகவினர் பலரும் வந்திருந்தனர்.
அப்போதே தமிழக பாஜக இந்த விஷயத்தில் கடும்கண்டனங்களை தெரிவித்தது. தமிழக காவல்துறை முறையாக செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
ஆனால், ஸ்டாலின் அரசும், தமிழக காவல்துறையும் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவு ,
இரண்டு நாட்களுக்கு முன்பு, 26.10.2021 அன்று இரவு மீண்டும் மலைக்கோவில் சேதப்படுத்தப்பட்டு மிகப்பெரிய சிலைகள் எல்லாம் தரைமட்டமாக்கப்பட்டிருக்கிறது. பெரிய சாமி , பைரவர், செங்கமலை, ஐயர் சாமி சிலைகள் முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயத்தில் ஸ்டாலின் அரசின் செயல்பாடு கண்டனத்திற்கு உரியதாகவும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.
இதேபோல ஆந்திராவில் பல இந்து கோவில்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டது. ஆந்திராவில் 19 மாதங்களில் 128 கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. அந்த மாநில அரசும் மெத்தனமாக இருந்தது. பல மாதங்கள் கழித்து இது “மதமாற்ற அடிப்படைவாத சக்திகளால்” வேண்டுமென்றே செய்யப்பட்ட சதி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.
இது இந்து மக்களின் நம்பிக்கையை சிதைக்கவும், கோவிலை தாக்குவதன் மூலமாக ஒரு இந்துக்களின் மனதை புண்படுத்தி அதன் மூலம் கலவரத்தை தூண்டும் நோக்கத்திலும் வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இது பயிற்சி பெற்ற குற்றவாளிகளால் செய்யப்பட்ட , திட்டமிடப்பட்ட ஒரு organised crime என்பதுவும், அந்த இடங்களை பார்க்கும்போது தெரிகிறது.
கற்சிலைகள் பலவும் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. வனத்துறைக்கு சொந்தமான, காட்டில் உள்ள ஒரு மலைக்கோவில், இரவு நேரத்தில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற குற்றவாளிகளுக்கே இது சாத்தியம். ஆந்திராவில் கோவில்களை சேதப்படுத்திய அதே கும்பலோ , அதனோடு தொடர்புடைய கும்பலோ இதிலும் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்று முறையாக விசாரணை செய்யப்படவேண்டும்.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்தே, இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஓரவஞ்சனையுடன் தான் நடந்துவருகிறது. இந்துக்களின் ஆன்மீக சிறப்பு மிக்க ஸ்தலம் தொடர்ந்து சமூக விரோதிகளால் தாக்கப்பட்டும் , இந்த திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது அந்த குற்றவாளிகளுக்கு மறைமுக ஆதரவு அளிப்பதாக உள்ளது.
திமுக அரசும், தமிழக காவல்துறையும் உடனடியாக கோவிலை சேதப்படுத்திய குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இந்துக்களின் மனதில் எழுகிற இந்த கேள்விக்கு ஸ்டாலின் பதில் சொல்லியாக வேண்டும் …..
இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா ஸ்டாலின் அவர்களே ?!
- அ.அஸ்வத்தாமன் , பாஜக