புதுச்சேரி:
புதுச்சேரியில் இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை காவல்துயினர் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி டிஎன்.பாளையத்தைச் சேர்ந்த 16 வயது தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்தார். இவருடைய பெற்றோர் காலமாகிவிட்டனர். இந்நிலையில், வீட்டின் அருகே இருந்த சிமெண்ட் கடையில் பணிபுரிந்து வந்த ராஜ்குமார் என்பவருக்கும், சிறுமிக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம் ஏற்பட்டதாம். அப்போது அந்தச் சிறுமியிடம் திருமண ஆசை காட்டி ராஜ்குமார் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே நோணாங்குப்பத்தில் உள்ள படகுத் துறைக்கு வருமாறு ராஜ்குமார் சிறுமியை அழைத்துள்ளார். அங்கு வந்த சிறுமிக்கு மயக்க மருந்து கலந்த இளநீரை அவர் கொடுத்துள்ளார். அதைக் குடித்த சிறுமி மயக்கமடைந்தார். அதன் பின்னர் ராஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் அவரை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மயக்கம் தெளிந்து எழுந்த சிறுமி தனக்கு என்ன நேர்ந்தது என்பது தெரியாமல் வீட்டுக்குச் சென்றுள்ளார். சில நாள்கள் கழித்து சிறுமியை தொடர்பு கொண்ட ராஜ்குமார் நடந்ததைக் கூறியதுடன் மீண்டும் அந்த இடத்துக்கு வருமாறு கூறி மிரட்டியுள்ளார். இதைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்த அந்தச் சிறுமி, வீட்டின் அருகே இருந்த டெய்லர் ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து புதுச்சேரி குழந்தைகள் நலக் குழுமத்தில் புகார் செய்தார்.
இதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நலக்குழு விசாரணை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதும், கர்ப்பிணியாக இருந்ததும் தெரியவந்தது. இந்நிலையில், குழந்தைகள் நலக்குழுத் தலைவியின் பரிந்துரையின் பேரில் அரியாங்குப்பம் காவல்துறையினர், ராஜ்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது அறிந்து, தலைமறைவான 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.


