சென்னை:
ஆன்மிக ஜோதி தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
அவரது இரங்கல் அறிக்கை:
தமிழகத்தின் ஆன்மிக ஜோதியாய் விளங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதி மறைவு தமிழகத்துக்குப் பேரிழப்பு ஆகும்.
தஞ்சை மாவட்டத்தில் மஞ்சக்குடி எனும் குக்கிராமத்தில் பிறந்த தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் சின்மயானந்தர் மூலம் துறவறம் மேற்கொண்டு உலகம் முழுவதும் இந்து தர்மத்தை கொண்டு சென்றவர். சேவையை ஆன்மிகத்தின் மூலம் கொண்டு சென்று அனைத்து மக்கள் வாழ்வும் மேம்பட வைக்க அரும்பாடுபட்டவர். அவரது மறைவு தமிழகத்துக்கு பேரிழப்பாகும்.
தர்ம ரட்சண சமிதி, எய்ம்ஸ் ஃபார் சேவா (சேவையே நோக்கம்) போன்ற அமைப்புகளில் இளம் தலைமுறையினரை ஈர்த்து சமுதாய கண்ணோட்டத்தையும் ஆன்மிக ஞானத்தையும் ஒருங்கே கொண்டு சென்றவர் சுவாமிகள். உலகில் ஆக்கிரமிப்பு மதங்களால் புறந் தள்ளப்பட்ட அனைத்து மதங்களையும், சமயங்களையும் மதித்து அனைத்து மதங்களையும் ஒருங்கிணைத்து உண்மையான சமய நல்லிணக்கத்திற்கு வித்திட்டவர். உலகம் பூராவும் இந்து சமய பெருமையையும் வேதாந்தக் கருத்துக்களையும் கொண்டு சென்றவர்.
தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகள் நெடுநோக்குப் பார்வையுடன், திட்டமிட்ட உருவாக்கிய அமைப்புகள் என்றும் நிலைத்து நின்று ஆன்மீக விழிப்பு உணர்வுடன் கூடிய சமுதாய, சமய பணியை நிறைவேற்றும் என்பதில் ஐயமில்லை.
பாரத நாட்டில் உள்ள பல பெரியோர்களாலும், பிரமுகர்களாலும் போற்றப்பட்டவர் சுவாமிகள். அகில உலக அளவில் பல தலைவர்களை சந்தித்து உலகில் அமைதி நிலவ பாடுபட்டவர். தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளுக்கு இந்து முன்னணி சார்பில் சிரம் தாழ்ந்த சிரத்தாஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா ஆலயங்களிலும் மோட்ச தீபம் ஏற்றி வழிபட அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


