சென்னை:
மாணவர்களுக்கு அரசு வழங்கி வரும் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தில், இம்முறை பிளஸ் 2 படிக்கும் போதே வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மாணவ மாணவியர் நலன் கருதி விலை இல்லா பாடப் புத்தகங்கள், விலை இல்லா நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், மடிக் கணினி உள்பட 14 வகை விலையில்லாப் பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உயர் கல்வி படிக்கும்போதுதான் மடிக்கணினி பயன்படுகிறது என்பதால், ஏராளமான ஏழை மாணவர்கள் பயன் அடைகிறார்கள். இந்த மடிக்கணினி பிளஸ் 2 முடித்த பிறகு, அவர்கள் உயர்கல்வியில் சேர்ந்த பிறகுதான் அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களால் வழங்கப்பட்டு வந்தது.
அந்த மடிக்கணினி முன்கூட்டியே கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை இந்த வருடம் முதல், மடிக்கணினியை மாணவ-மாணவிகளுக்கு வழங்கும் பணியை நேற்று தொடங்கியது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் கூறுகையில் 2015-2016ம் ஆண்டு கல்வி ஆண்டுக்கு உரிய 5 லட்சத்து 8 ஆயிரத்து 72 மடிக்கணினிகள் கொடுக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த வருடம் மடிக்கணினிகள் அனைத்தும் வந்துவிட்டன. எனவே உடனே கொடுக்கும் பணியை அந்தந்த பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள் செய்ய உள்ளனர் என்று தெரிவித்தார். எனவே மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டே பயன்படும். அவர்கள் உயர்கல்வியில் படிக்கும்போதும் பயன்பெறுவார்கள் என்றார்.


