
கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!
நேற்று (02.07.2026) தமிழக முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களை கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தித்து, கோவில் இடங்களை ஆக்கிரமித்த ஆக்கிரமிப்பாளர்கள், நீண்ட நாள் வாடகைகார்கள், குத்தகைதாரர்களுக்கு பட்டா வழங்கிட கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவில் வாடகை, குத்தகை என்பது சந்தை மதிப்பைவிட மிகமிகக் குறைவு. அந்த தொகையை கூட, ஆண்டு அனுபவிப்பவர்களில் பலர் பல ஆண்டுகளாக தராமல் ஏமாற்றி வருகிறார்கள்.
மேலும் கோவிலுக்குச் சொந்தமான சொத்துக்கள் யாவும் சட்டப்படி மைனர் சொத்து. அதாவது ஆலயத்தில் இறைவன் என்றும் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. கோவிலின் சொத்து என்பது அந்த கோவிலின் இறைவனின் பெயரில் இருக்கிறது. அதனைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தின் மூலம் கோவில் செலவுகளைச் செய்யவும் ஏற்படுத்தப்பட்டது தான் இந்து சமய அறநிலையத்துறை ஆகும். எனவே இறைவனின் சொத்திற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது, கூடாது. அப்படி கொண்டாடினால் அது சட்ட விரோதம் ஆகும். மேலும் ஏழைகளுக்கு தருவதற்கு என்று கம்யூனிஸ்ட்கள் கூறுவார்களேயானால், கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் சொத்துக்களை ஏழைகளுக்குப் பிரித்து பட்டா தந்து முன்மாதிரியாக அக்கட்சி விளங்கலாமே!
கம்யூனிஸ்ட் அலுவலகங்கள் கார்ப்பரேட் மாளிகைகளாக பல நூறு கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகின்றன. இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஜாதியைக் காரணம் காட்டி வாடகைக்குக் கூட இடம் தர மறுத்தவர்கள்தான் இந்த கம்யூனிஸ்ட்கள்.
நமது நாட்டில் மத்திய, மாநில அரசுகளுக்கு அடுத்தபடியாக அதிக சொத்துக்கள் இருப்பது வக்ஃப் வாரியம் எனும் மசூதி சொத்தும், கிறித்துவ மிஷனரி எனும் சர்ச்சுக்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தான். எனவே அவற்றில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க கம்யூனிஸ்ட்கள் கோரலாமே? அதைப்பேச மாட்டார்கள். பேசினால் கம்யூனிஸ்ட்களின் கூட்டணி கட்சிகளான சிறுபான்மை மக்களிடம் ஓட்டு பிச்சையெடுக்கும் கட்சிகளே எதிர்க்கும்.
கோவில் சொத்து என்பது பணக்காரர்கள், மன்னர்கள் கொடுத்தது என்று பலரும் நினைக்கிறார்கள். சாதாரண மக்கள் பலரும் கோவிலுக்கு தங்களுக்கான சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார்கள். காரணம் இறைவன் மீதான பக்தி மற்றும் வேண்டுதல். உதாரணமாக ஆயுள் தண்டனை கைதியாக இருந்த ஒருவர் மனம் திருந்தி பின்னாளில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தில் சென்னை அடையாறில் சொத்து வாங்கி அதனை திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரருக்கு எழுதி வைத்த இடம் தான் இன்று ஆக்கிரமிப்பில் உள்ள அடையாறு அருணாசலபுரம் பகுதி.
இன்று அதன் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். அந்த சொத்து முழுவதும் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே பக்தர்கள் கோவிலின் அன்றாட பூஜை, விசேஷ கால பூஜைகள், திருவிழாக்கள், அன்னதானம் என பலவற்றை நடத்துவதற்காக என்று குறிப்பிட்டே சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்கள். அந்த பக்தர்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கும் கோவில் நிர்வாகத்தை ஏற்று இருக்கிற இந்து சமய அறநிலையத் துறைக்கும், அந்த கோவிலில் உள்ள இறைவனை வழிபடும் பக்தர்களாகிய நமக்கும் இருக்கிறது.
இதனை கம்யூனிஸ்ட் போன்ற சந்தர்ப்பவாத பகல் கொள்ளைகாரர்கள் திருடி சுருட்டுவதை வேடிக்கை பார்த்தால் அந்தப் பாவம் நமக்கும் வந்து சேரும். எனவே மக்களிடையே பேராசையை வளர்த்து கோவில் சொத்துக்களை கபளீகரம் செய்திட தூண்டிவிடும் மக்கள் விரோத கம்யூனிஸ்ட்களிடம் தமிழக முதல்வர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்திற்கு விரோதமாக, தர்மத்திற்கு எதிரான செயல்களுக்கு தமிழக அரசு துணைபோகக்கூடாது என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.




