கிராமிய ஆயுர்வேத மருந்தகம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி மருந்து வழங்கல்
காரமடை அருகேயுள்ள தோலம்பாளையம் அரசு கிராமிய ஆயுர்வேத மருந்தகம் சார்பில் தோலம்பாளையம், கெம்மராம்பாளையம், மருதூர் உள்ளிட்ட ஊராட்சிமன்ற அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சீளியூர் அஞ்சல் நிலைய அலுவலர் மற்றும் ஊழியர்கள், தாயனூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள், கோபனாரி சோதனைச்சாவடி காவலர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோருக்கு கொரோனா நோயை தடுக்கும் வகையில் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தினை ஆயுர்வேத அரசு உதவி மருத்துவ அலுவலர் P.மேகலை வழங்கினார்.
இந்நிகழ்வின் போது கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள பொதுமக்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதற்கான வழிமுறைகளை மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி அறிவுரைகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதில் அரசு ஆயுர்வேத மருத்துவ அலுவலர் P.மேகலை குறிப்பிட்டுள்ளதாவது:
நன்கு கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை எல்லோரும் கட்டாயம் சற்று சூடாகவே அருந்துவது நல்லது. இது நமது ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
எளிமையான உடற்பயிற்சி, யோகாசனங்கள், பிரணாயமம் போன்ற மூச்சு பயிற்சிகளை தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் செய்வது நல்லது. இது சுவாச மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
உணவில் மஞ்சள், சீரகம், தனியா (கொத்தமல்லி), பூண்டு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.ஜீரண சக்தி சரியாக இருந்தால் மட்டுமே நோய் எதிர்ப்பு திறன் சரியாக இருக்கும்.
கண்டுஷம்: மலம் கழித்த பிறகும், பல் சுத்தம் செய்த பிறகும் ஆயுர்வேதத்தில் சொல்லப்படும் Oil Pulling செய்வது நல்லது. இது வாயில் உள்ள கிருமிகளை அழித்து வாய், பல், ஈறு மற்றும் தொண்டை சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கும்.
நஸ்யம்: மலம் கழித்த பிறகு, பல் துலக்கிய பிறகு இரண்டு சொட்டு நல்லெண்ணெயை இரண்டு நாசி துவாரங்களிலும் விட்டுக்கொள்வது மூக்கின் வழியாக நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.
நீராவி பிடித்தல்: புதினா, நொச்சி இலை, ஒமம், துளசி, தும்பை இலை, தும்பை பூ அகியவற்றை கொண்டு நீராவி பிடிப்பது மிகவும் பயனுள்ள முறையாகும்.
லவங்க சூரணம் அல்லது பொடியை சிறிதளவு தேனுடன் குழைத்து உணவுக்கு பிறகு காலை, மாலை இரு வேளையும் உட்கொள்வது மிகவும் நல்லது.
ஆயுஷ் குடிநீர்: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமைச்சகம் இந்த குடிநீரை அறிமுகபடித்தியுள்ளது. துளசி—4 பங்கு, லவங்கபட்டை—2 பங்கு, சுக்கு—2 பங்கு மற்றும் மிளகு—1 பங்கு சேர்த்து பொடியாக்கி, 1 தேக்கரண்டி பொடியை 150 மில்லி கொதிக்க வைத்த நீரில், பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து தேநீர் போல் இரு வேளை அருந்தலாம். மேற்கூறிய 4 பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிய முறையில் ”ஆயுஷ் குடிநீர்” பொடியை தயாரித்துக்கொள்ளலாம்.
மஞ்சள் பால்: மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து பருகுவது நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும்.
பூண்டுப்பால் அல்லது லசூனா ஷீரபாகம்: 5 அல்லது 6 பல் பூண்டுகள், 100 மில்லி, பால் மற்றும் 400 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து, தண்ணீர் முழுவதும் சுண்டிய பிறகு பாலை மட்டும் தினமும் இரு வேளை உட்கொள்வதும் நல்லது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- செய்தி: SVP சரண்