கோவை சாந்தி கியர்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன் மறைவு குறித்து, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில்…
கோவை சாந்தி சோஷியல் சர்வீஸ் நிறுவனர் மற்றும் சாந்தி கியர்ஸ் உரிமையாளர் ஐயா திருமிகு சுப்பிரமணியம் அவர்கள் காலமான செய்தி நம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழகத்தில் ஏன் இந்தியாவிலேயே அம்மா உணவகங்களுக்கு முன்மாதிரியாக முதல்முதலாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சாந்தி சோஷியல் சர்வீஸ் மூலம் உணவகத்தை நடத்தி வந்தார். பொதுமக்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஜன அவுஷதி திட்டம் மூலம் உயிர் காக்கும் மருந்துகள் குறைந்த விலையில் கிடைப்பதற்கு மக்கள் பயன் பெறுவதற்கு அந்தத் திட்டம் வடிவமைத்து அமுல்படுத்துவதற்கு முன்பாகவே சாந்தி சோஷியல் சர்வீஸ் பார்மசி ஏற்படுத்தி அதோடுகூட மருத்துவ சோதனை கூடத்தையும் ஏற்படுத்தி மிக குறைந்த கட்டணத்தில் இந்த செயல்களை செய்து வந்தார்.
துளியும் விளம்பரத்தை விரும்பாத மனிதர் கோவை மாநகரில் கிராமப்பகுதிகளில் அரசு பள்ளிக்கூடங்கள் பலவற்றிற்கு கட்டிட வசதிகளையும் பல்வேறு விதமான கல்வி உதவிகளையும் செய்து கல்விச் சேவை செய்து வந்தவர்.
கோவை மாநகரில் முகத்தையும் காட்டாமல், முகவரியையும் தெரிவிக்காமல் பல லட்சம் மக்களின் அன்றாட பசியினை தீர்க்க குறைந்த விலையில், வருடம் முழுவதும் தினமும் மூன்று வேளை உணவு மற்றும் குறைந்த விலையில் மருத்துவ சேவைகள் அளித்து வந்த சாந்தி சோசியல் சர்வீஸ் மற்றும் சாந்தி கியர்ஸ் நிறுவனங்களின் சேர்மன் சுப்பிரமணியம் இன்று காலை இயற்கை எய்தினார்
எந்த ஒரு பின்புலமும் இல்லாத ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, தொழில்துறையில் மகத்தான சாதனைகள் செய்து, “சாந்தி கியர்ஸ்”என்ற இயந்திரங்களுக்கான கியர்ஸ் உற்பத்தி துறையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக தன்னுடைய நிறுவனத்தை உருவாக்கிய சாதனையாளர்.
சுவாமி விவேகானந்தரின் கருத்துகளை முழுமையாக படித்து, கடைபிடித்து எந்தவிதமான சுயவிளம்பரம் இன்றி ஏழை மக்களுக்கு, சமுதாயத்தின் அடித்தட்டு மக்களுக்காக அர்ப்பணிப்போடு பல சேவைகள் செய்து உண்மையான சேவைப்பணியாற்றியவர். மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தவர்.
அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்… என்று தெரிவித்துள்ளார்.