![சிறுவாணி அணையில்,8அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு.. 1 images 38 2](https://dhinasari.com/wp-content/uploads/2022/07/images-38-2.jpeg)
கேரள வனப்பகுதியில் பெய்த மழையால் சிறுவாணி அணையில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டதால், தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகி கேரள அதிகாரிகளை தொடர்பு கொண்டு அணையை மூட வலியுறுத்தி வருகின்றனர்.
மேற்குத்தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. சிறுவாணி அணை அமைந்திருக்கும் கேரள வனப்பகுதியில் பெய்த மழையால், 15ம் தேதி, 40 அடியாக நீர் மட்டம் மொத்த உயரம் 50 அடிஉயர்ந்துள்ளது.கடந்தாண்டுகளில் இயற்கை சீற்றங்களால் பெருத்த சேதம் ஏற்பட்டதால், அணை பாதுகாப்புக்காக, 5 அடிக்கு குறைவாக, 45 அடிக்கு மட்டுமே நீர் தேக்க, கேரள மாநில நீர்ப்பாசனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கடந்த 15ம் தேதி, 40 அடிக்கு தான் நீர் தேங்கியிருந்தது. மழைப்பொழிவு தொடர்ந்ததாலும், முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உட்பட அருவிகளில் இருந்து நீர் வரத்து அதிகமாக இருந்ததால், 50 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது.
கன மழை பெய்ததாலும், சிற்றருவிகளில் வரத்து இருந்ததாலும், நீர் மட்டம், 43 அடியாக உயர்ந்தது. அதனால், 16ம் தேதி 70 செ.மீ., உயரத்துக்கும், 17ம் தேதி 100 செ.மீ., உயரத்துக்கு மதகு திறக்கப்பட்டது. நேற்று காலை, 8;00 மணி நிலவரப்படி, 15 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மழை வேகம் சற்று குறைந்ததால், மதகு திறப்பு மீண்டும், 70 செ.மீ., ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று நாட்களில், 8 அடி உயரத்துக்கு நீர் வெளியேற்றப்பட்டு, நேற்றைய தினம், 37 அடியாக நீர் மட்டம் குறைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், மதகுகள், 70 செ.மீ., உயரத்துக்கு திறந்திருப்பதால், தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது.
இது, தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, வனப்பகுதியில் கன மழை பெய்வதால், அணையின் பாதுகாப்புக்காக, தண்ணீர் திறந்து விடப்படுகிறது’ என பதிலளிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், 45 அடி உயரத்துக்கு நீரை தேக்கி விட்டு, அதன் பின் திறந்து விடலாம். அதற்கு முன்னதாக திறந்து விட்டு இருப்பை குறைக்க வேண்டாம் என தமிழக அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தினர்.
அதை கேட்காமல், மதகுகளை, 70 செ.மீ., உயரத்துக்கு திறந்து வைத்திருப்பதால், தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், கேரள நீர்ப்பாசனத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, மதகுகளை மூட வலியுறுத்தி வருகின்றனர் .