சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனோ பாதிக்கப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில், மாஜிஸ்திரேட் பத்மநாபன் விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையிலடைக்கப்பட்டிருந்த சிறப்பு காவல் காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கு கடந்த 24ம் தேதி கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த பால்துரையின் உடல் அரசு மருத்துவமனை பிணவரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இறப்பிற்கான காரணம் குறித்து நீதித்துறை நடுவர் மருத்துவர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணையைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது! பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
தனது கணவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல அனுமதிக்க நீதித்துறை நடுவரிடம் பால்துரையின் மனைவி மங்கையர்திலகம் கோரிக்கை வைத்துள்ளார். வழக்கமாக கொரோனோ பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் உடல் உறவினர்களிடம் வழங்காமல் மதுரை தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை