
தோல்வி பயத்தால், தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி செய்வதை தேர்தல் ஆணையம் கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது…
பாராளுமன்ற தொகுதி வரன்முறை பற்றிய மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் என்ன இருக்கப்போகிறது? கற்பனையில் வன்முறையை தூண்டி திமுக மிரட்டல் விடுப்பது ஜனநாயக விரோதம். பாராளுமன்றத்தில் திமுக கூட்டணியில்தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் இருக்கும் போது, பாராளுமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு பொது இடத்தில் மசோதா நகலை எரிப்பது என்ற அநாகரீகமான செயலை மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் செய்வது சட்டவிரோதச் செயல் ஆகும்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் சட்ட நகலை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் திமுகவின் தலைவரான கருணாநிதி அவர்கள் எரித்தபோது வழக்கை சந்திக்க வேண்டி வந்தது. அப்போது கருணாநிதி நாங்கள் சட்ட நகலை எரிக்க வில்லை என்று நீதிமன்றத்தில் கூறி தப்பினார்.
இப்போதும் மசோதா நகலை எரித்தார்களா? இல்லையா? என்பது ஒருபுறம். பாராளுமன்ற நடைமுறையை அவமதிப்பது சட்ட விரோதம் ஆகும். அதுவும் அரசியல் சாசன சட்டத்தை மதிக்க உறுதிமொழி எடுத்தவர் அதனை அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடைமுறையை அமல்படுத்தும் தேர்தல் ஆணையம் திமுக தலைவரின் வன்முறையை தூண்டும் பேச்சுக்களை, அறிக்கைகளை கண்டுகொள்ளாமல் இருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
காவல்துறை மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் இன்னமும் திமுகவை ஆளுங்கட்சியாகவே கருதுகிறார்களா? தமிழகத்தில் அசாதாரண சூழல் ஏற்பட்டு தேர்தலை தள்ளி வைக்க சதி நடக்கிறதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.
சாதாரணமாக நிகழ்ச்சி நடத்த 48 மணிநேரம் முன்னதாக தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைனில் மனு அளித்து அனுமதி வாங்க வேண்டும் என்ற நிலையில், நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் அறிவித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்வது தேர்தல் அதிகாரிகளின் உள்ளடி வேலையா?
பாராளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு புதியது இல்லை. எப்படி மாநில அரசு மாவட்டங்களை பிரிக்கிறதோ அதுபோல இதனை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தியே வந்துள்ளது.
திமுக, மத்திய அரசின் கூட்டணியில் இருந்த போதே தமிழகத்தில் 41 எம்.பி.க்கள் என்பது 39 எம்பி ஆனது. அப்போது மௌனமாக ஏற்றுக்கொண்டது திமுக.
ஆனால் தற்போது அவ்வாறு இல்லாமல் சம அளவிலான எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்தி, அதன் பலனாக பெண்களுக்கான ஒதுக்கீடு 33% தருவதற்கு வழிவகை காண்பதாக இம்மசோதாவில் கூறப்படுகிறது.
அதன் முழு வடிவமான மசோதா இன்று தான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில், திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கற்பனையான பதற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்துவது, தேர்தல் தோல்வி பயமே காரணம் ஆகும்.
இந்து விரோத திமுகவின் தேச விரோத செயலுக்கு தமிழக மக்கள் முற்றுப்புள்ளி வைக்கப்போகும் தேர்தல் இது. திமுக வன்முறையை தூண்டி, தற்கொலை நாடகங்களை நடத்தி தேர்தலை சீர்குலைக்க நடக்கும் நாடகத்தை தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இது குறித்து தேர்தல் ஆணையரிடம் இந்து வழக்கறிஞர்கள் முன்னணி சார்பில் புகார் மனு நேரடியாக அளிப்பார்கள்.
தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதியை நிலைநாட்ட இந்து முன்னணி முயற்சி செய்யும்.
எனவே பொது மக்கள் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பரப்பும் பொய்யை நம்ப வேண்டாம்.
பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.




