சென்னை:
ஜெயலலிதாவின் ஆவி சசிகலா குடும்பத்தினரைத் துரத்துவதாக பரவலாகப் பேச்சு எழுந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன் மறைந்த சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் உயிரிழந்த விவகாரத்தைச் சொல்லி, இது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
அன்று மருத்துவமனையில் இருந்த ஜெயலலிதாவைப் பார்க்க வந்த அவரின் சொந்த அண்ணன் மகளைப் பார்க்க விடவில்லை!
இன்று தனது சொந்த அண்ணன் மகன் இறப்புக்குக் கூட வந்து பார்க்க சிறைத்துறை விடவில்லை! வாழ்க்கை ஒரு வட்டம்! – என்று சமூக வலைத்தளங்களில் சசிகலா குறித்து செய்திகள் உலாவருகின்றன.
ஜெயலலிதா இறப்புக்குக் காரணம் சசிகலா குடும்பத்தினரே என குற்றச்சாட்டுகளை மக்கள் முன்வைத்தனர். இருந்தபோதும், அதை எல்லாம் ஒரு பொருட்டாகவே சசிகலா எடுத்துக் கொள்ளவில்லை. பன்னீர்செல்வத்தை ஆட்சியமைக்க வைத்தசில நாட்களில், தானே ஆட்சியில் அமர வேண்டும் என்று என்னவெல்லாமோ செய்தார். ஆனால் அது இயலவில்லை. கட்சி இரண்டானது. கட்சிக்கு கௌரவத்தைத் தந்த இரட்டை இலைச் சின்னமும் இப்போது முடங்கிப் போனது!
முதலமைச்சராகியே தீருவேன் என்று பன்னீர்செல்வத்தைத் தூக்கி அடித்தார். ஆனால், அவரைத் தூக்கி அடித்தது சொத்துக் குவிப்பு வழக்கில் வந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு.
இருப்பினும் ஜெயலலிதா சமாதி முன் நின்று, மீண்டுவருவேன் என்று சமாதியை அடித்து சத்தியம் செய்து கிளம்பினார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் சிறையில் சலுகை எதுவும் கிடைக்காமல் ஏமாற்றமே மிஞ்சியது!
இருப்பினும் ஆட்சியும், கட்சியும் தன் குடும்பத்தினரின் கையை விட்டுப் போய்விடக் கூடாது என்று குறியாக நின்றார். அதனால், ஜெயலலிதா ஒரு காலத்தில் கட்சியை விட்டுத் துரத்தி விட்ட தன் உறவினர் தினகரனை கட்சியில் து.பொ.செ. ஆக்கி, பின் ஜெயலலிதா நின்று வென்று, அவரது இறப்பால் காலியான அதே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களம் இறக்கினார். பண பலத்தால் வெற்றி பெற்று விடலாம் என நினைத்த இவர்களின் எண்ணம், தவிடுபொடியானது. தேர்தல் தள்ளிப் போனது மட்டுமல்ல, தினகரனுக்கு தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சசிகலா கணவர் எம்.நடராஜனோ, கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் காலம் தள்ளி வருகிறார்.
சசிகலாவை மட்டுமின்றி, அவர் சார்ந்த ஊழலுக்குத் துணைநின்று ஊழல் செய்த கட்சி நிர்வாகிகள், அமைச்சர்களையும் வருமான வரித்துறை உருவில் ஜெயாவின் ஆவி துரத்தி வருகிறது.
இதனிடையே அதிமுகவில் ஒரு குழு, சமரசம் என்ற பெயரில், தினகரனை கட்சியில் தலையிடாமல் ஒதுங்கி இருக்குமாறு கோரியுள்ளது. இவ்வாறு, ஒவ்வொரு முடிவும் தமக்கும் தம் குடும்பத்துக்கும் எதிராக வருவதை அறிந்த சசிகலா குடும்பத்தினர் போயஸ் கார்டனை விட்டே வெளியேறிவிட்டனர்.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர்கள் ரகசியமாக மந்திரவாதிகளை சந்திப்பதும், கோவில்களில் ரகசியமாக யாகங்களை நடத்திவருவதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது. துரத்தும் ஜெயலலிதா ஆவியின் கோபத்தைத் தணிக்க எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று இறங்கியுள்ளதாகவே பேசப் படுகிறது. இருப்பினும் இவர்கள் செய்துவரும் யாகங்களும் பூஜைகளும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லையாம்!
இந்தச் சூழ்நிலையில்தான், சசிகலாவின் அக்கா மகன் மகாதேவன் திருவாவடுதுறைக்கு வந்த வழியில், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். ஜெயலலிதாவால் ஒரு கட்டத்தில் கட்சியில் இருந்தே துரத்தியடிக்கப்பட்டவர் இந்த மகாதேவன். அவர் உயிரிழந்த விவகாரத்தை நினைத்து, சசிகலா குடும்பத்தினர் மிகவும் பயந்து போனதாகவே பேசப்படுகிறது. இவ்வாறு சசிகலா குடும்பத்தினர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவர்களுக்கு அபசகுனமாகவே இருப்பதால், ஜெயலலிதா ஆவியின் பிடியில் இருந்து தப்ப என்ன செய்வது என்று அவர்கள் யோசித்து வருகின்றனராம்! இருப்பினும் ஜெயலலிதா மரணத்தில் விளைந்த மர்மங்களும், அவர் கொடுத்த சாபமும் கட்சியின் உண்மையான விசுவாரிகள், மக்களின் சாபமும் சசிகலா குடும்பத்தாரை சும்மா இருக்க விடாது என்று பொங்குகின்றனர் மக்கள். இதனால் பொதுமக்களிடையே, ஜெயலலிதா ஆவி குறித்த பேச்சு இப்போது பரவலாகி வருகிறது.