விருத்தாசலம் விஎன்ஆர் நகரில் உள்ள ஜமால் பாஷா தெரு உள்ளது. இந்த தெருவில் வீடுகளில் உள்ள பொருட்கள் திடீர் திடீர் என மாயமானது. குறிப்பாக ஜன்னல் ஓரம் ஒரு பொருள் வைத்தால், அதுதான் காணாமல் போய் கொண்டிருந்தது. இதனால் ஜமால் பாஷா தெருவாசிகள் குழப்பமி போனார்கள்.
இந்த தெருவாசிகளுக்கு தங்கள் வீட்டு ஜன்னல் அருகேதான் ஷெல்ப்கள் இருக்கின்றன. அதனால் அங்குதான் செல்போன், வாட்ச், என முக்கிய பொருட்களை வைக்க முடியும். அப்படி வைத்த பொருட்கள்தான் மாயமாகி கொண்டே இருந்தன.
இந்த சமயத்தில், நேற்று விடிகாலை அதே தெருவில் உள்ள ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் சத்தம் கேட்டது. தூங்கி கொண்டிருந்த எல்லாரும் அடித்து பிடித்து எழுந்தார்கள். அப்போதுதான் யாரோ தன் வீட்டில் திருட வந்ததுபோல தெரிந்தது.
அதனால் வீட்டு முன்னாடி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவை ஆராய்ந்தார்.
கேமராவை பார்த்து ரம்ஜான் அலி மட்டுமல்ல.. ஜமால் பாஷா தெருவாசிகளே தெறித்துகொண்டு ஓடினார்கள். உடம்பில் ஒட்டுத் துணி கூட இல்லாமல், ஒருவர் அந்த தெருவுக்குள் வந்து கொண்டிருக்கிறார்.
அவரது கையில் ஒரு பிளாஸ்டிக் பைப் இருக்கிறது. ரம்ஜான் அலி வீட்டில் வந்து பொருட்களை அபேஸ் செய்ய முயல்வதும் தெரிகிறது. இதன்பிறகு தூங்கி கொண்டிருப்பவர்கள் விழிக்கும் சத்தம் கேட்டதும், சுவர் ஏறி குதித்து தப்பி ஓடுகிறார். இந்த காட்சிதான் அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.
அது மட்டுமல்ல.. அந்த பைப்பை ஒவ்வொரு வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே விட்டு பொருட்களை தூக்கி கொண்டு போனது இவர்தான் என்பதும் தெரியவந்துள்ளது. வீடுகளின் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டி பார்ப்பது.. பக்கவாட்டில் இருக்கும் படிக்கட்டில் ஏறுவது.. அங்குமிங்கும் நோட்டம் போட்டுக் கொண்டு நிர்வாண கோலத்துடனேயே தெருவுக்குள் அலைவதுமாக இருக்கிறார்.
ஆனால் இந்த விசித்திர திருடன் யார் என்றே தெரியவில்லை. எதற்காக நிர்வாண கோலத்தில் வந்து திருட வேண்டும் என்றும் தெரியவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.