பிராமணன் என்றால் அறிவாளி என்பதை பட்டவர்த்தனமாகவும் ஒப்பீட்டாகவும் உதட்டளவில் இன்றி உள்ளத்தளவில் இருந்து எடுத்துச் சொல்லியிருக்கிறார் திமுக., அமைப்பு செயலாளர்.
நேற்றைய துக்ளக் இதழின் பொன்விழாவில் பேசிய ரஜினி காந்த், ஓர் ஒப்பீட்டுக்காகவும் மக்களுக்கு உடனே புரியுமே என்ற வகையிலும், முரசொலி கையில் வைத்திருந்தால், அவரை திமுக.,காரர் என்று சொல்லிவிடலாம்… காரணம் அது ஒரு கட்சிப் பத்திரிகை, அந்தக் கட்சிக்காரர்களே அதனை வாங்குவர்… அப்படி ஒருவர் துக்ளக் வைத்திருக்கிறார் என்றால், அவரை அறிவாளி என்று சொல்லலாம்; காரணம் அதனை குறிப்பிட்ட கட்சிக்காரர் எவரும் வாங்குவதில்லை. ஆழ்ந்து படிப்பவர்கள், அறிவாளிகளே வாங்குவர் என்று பொருள் படும் வகையில் பேசினார்.
ரஜினியின் இந்தக் கருத்து பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. திமுக., வினர், ஏதோ தாங்கள் அனைவரும் அறிவில்லாதவர்கள் என்று ரஜினி சொன்னதைப் போல் குய்யோமுறையோ என்று கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அவர்களில் ஒருவராக, திமுக.,வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஒருகருத்தைப் பதிலாக அளித்துள்ளார்.
முரசொலி படித்தால் அவன் தி.மு.க.காரன், துக்ளக் படித்தால் அவன் பிராமணன் என நடிகர் ரஜினிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலளித்துள்ளார்.
அதாவது, துக்ளக் பத்திரிகையின் 50 ஆம் ஆண்டு விழாவில் பேசிய ரஜினி, முரசொலி படித்தால் அவன் திமுக காரன், துக்ளக் படித்தால் அவன் அறிவாளி என பேசியிருந்தார்.
இது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரஜினி கூறியதில் ஒரு சிறிய திருத்தம் செய்ய வேண்டியுள்ளது என்று சொல்லி, துக்ளக் படித்தால் அறிவாளி அதாவது துக்ளக் படித்தால் பிராமணன்… என்று கூறியுள்ளார். இதன் மூலம், பிராமணன் என்றால் அறிவாளி என்று, மீண்டும் ஒரு சர்ச்சையை முரசொலி படிப்பவர்களை வைத்து கிளப்பியுள்ளார் ஆர்.எஸ்.பாரதி