1971-ஆம் வருடம் நடைபெற்ற நிகழ்வு குறித்து தமிழின் பாரம்பரிய நாளிதழான தினமணி வெளியிட்ட செய்தி இது.
மத உணர்வை அவமதிக்கும் விதத்தில் தி.க. ஊர்வலம்! சேலம் மக்கள் ஆச்சரியம்! கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
சேலம், ஜன. 24: திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஊர்வலம் ஒன்றில் இன்று 300 பேர்களுக்கு மேல் கூடி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஹிந்து புராண புருஷர்கள் பற்றி ஆபாசமாக சித்தரிக்கும் காட்சிகள் கொண்ட அட்டைகளை ஊர்வலத்தினர் தாங்கிச் சென்றனர்.
முருகக்கடவுள் பிறப்பைப் பற்றி ஆபாசமான அட்டைகள் இருந்தன. 10 அடி உயரம் உள்ள ராமர் சிலை ஒன்று ஒரு வண்டியின் கொண்டுவரப்பட்டது. வண்டிகளில் பலர் நின்று கொண்டு செருப்புகளால் ராமர் சிலையை அடித்துக் கொண்டே இருந்தனர். ஊர்வலத்தின் முடிவில் மரத்தினால் செய்யப்பட்டிருந்த ராமர் சிலை ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது
தெய்வபக்தி உள்ளவர்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தும் இத்தகைய ஆபாச அட்டைகள் கொண்ட ஊர்வலத்தை அதிகாரிகள் தடுக்காதது பற்றி நகர மக்கள் ஆச்சரியம் தெரிவித்தனர். மகாநாட்டு நிர்வாகிகள் எந்த மாதிரியான அட்டைகள் கொண்டுவரப் போகிறார்கள் என்ற விவரம் தங்களுக்கு தெரியாது என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார். ஊர்வலக்காரர்களுக்கு பயந்து பல கடைகள் மூடப்பட்டன.
திராவிட கழகத் தலைவர் ஈ.வே.ரா. ஊர்வலத்தின் கடைசியில் ஒரு டிராக்டரில் அமர்ந்து பவனி வந்தார்.
ஊர்வலத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தவர்கள், போலீஸ் சூப்பரிண்டெண்ட் காரியாலயத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தனர். ஊர்வலம் அந்த இடத்தை நெருங்கியவுடன், தடிகள், கத்திகள், வாள்கள் போன்ற ஆயுதங்களுடன் ஊர்வலத்தில் இருந்தவர்களில் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி வந்தனர். ஆனால் போலீஸார் சரியான நேரத்தில் சமயத்தில் தலையிட்டு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் தவிர்த்தனர். ஊர்வலக்காரர்கள் கடவுள் எதிர்ப்பு கோஷங்களுடன் வந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கருப்புக் கொடிகளுடன் ஈவேரா எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.
- என்று செய்தி கூறுகிறது தினமணி.
இதன்படி, திட்டமிட்ட ரீதியில் ஊர்வலம் மூடநம்பிக்கை எதிர்ப்பு என்ற பெயரில், இந்துக் கடவுளரை கொச்சைப் படுத்தும் விதத்தில் நடைபெற்றது தெரிகிறது.
மேலும், கருணாநிதி தலைமையிலான அரசு, இந்த ஊர்வலத்தை வேடிக்கை பார்த்ததும், அரசு அதிகாரிகள் இத்தகைய அவதூறுப் பிரசார அட்டைகளுடன் வந்தவர்களைத் தடுக்காமல், அவர்களை அனுமதித்து அவர்களுக்குப் பாதுகாப்பாக வந்ததும் தெரிகிறது
ஊர்வலத்தினரின் அராஜகத்துக்குப் பயந்து, கடைக்காரர்கள் தங்கள் கடைகளைப் பூட்டியிருக்கின்றனர். மேலும், ஊர்வலத்தினர் கைகளில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததும் தெரியவருகிறது.
சிலர் கைகளில் தடிகள், கத்திகள், வாள்கள் என வைத்திருந்ததும் அதைக் கொண்டு, அமைதியான முறையில் எதிர்ப்பு கோஷம் எழுப்பியவர்களை வன்முறை வெறியாட்டங்களால் காயப் படுத்தி கொலை செய்யும் நோக்கத்துடன் கொலைவெறித் தாக்குதலுக்காக ஓடி வந்ததையும், போலீஸார் தலையிட்டு தடுத்ததையும் செய்தி கூறுகிறது.
இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ஈனத்தனமான ஓர் ஊர்வலத்தை முன்னின்று நடத்திய ஈ.வே.ராமசாமி நாயக்கர், இவ்வாறு ஓர் ஊர்வலமே நடத்தவில்லை என்ற அளவுக்கு இன்று பொய்மூட்டைகளை அள்ளி வீசுகின்றனர் தி.க., வினர்.