சமூக வலைத்தளங்களில் இன்றைய பரபரப்பு சர்ச்சையாக இருப்பது, ரஜினியை யார் நீங்க என்று கேட்டு, அன்று அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து இன்று அசிங்கப்பட்ட சந்தோஷ் என்ற இளைஞனைப் பற்றித்தான்!
தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த பாலசுந்தர் என்பவரது மகன் ராம்குமார் (வயது 23). இவர் ஒருநாள் இரவு வீட்டு முன்பு தனது மோட்டார் பைக்கை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலை பார்த்த போது நிறுத்தி வைத்திருந்த பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வடபாகம் போலீசில் புகார் அளித்தார், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து ராம்குமார் பழைய வண்டி வாங்குவதற்காக ஆன்லைனில் தேடியுள்ளார்.
திருடிய நபர்கள் வண்டியை விற்பதற்காக OLX ல் பதிவு செய்துள்ளார்கள். இதைப் பார்த்த வண்டியின் உரிமையாளர் ராம்குமார் விற்பனைக்கு பதிவு செய்த நபரைத் தொடர்பு கொண்டு வாங்குவதற்கான விவரங்களைக் கேட்டுள்ளார். அவர்களோ தூத்துக்குடி கால்டுவெல் காலனி பகுதிக்கு வாங்க… என்று சொல்லியிருக்கின்றனர். இதை அடுத்து, ராம்குமாரும் கால்டுவெல் காலனி பகுதிக்குச் சென்று விற்பனைக்கு வைத்திருந்த வண்டியை பார்த்துள்ளார். பார்த்தவுடனேயே அது காணாமல் போன தன்னுடைய வண்டிதான் என்பதை உறுதி செய்து கொண்டார்.
சரி… வண்டி விலை என்ன என்று அதனை விற்பவரிடம் கேட்டுள்ளார். அவர்களும் வண்டி உரிமையாளரிடம் பேரம் பேசி முடிக்க முயற்சி செய்துள்ளனர். ராம் குமார் பேரம் பேசியுள்ளார். ஆனால், அவர்களோ நிர்ணயித்த தொகையில் ரொம்பவே கறாராக இருந்துள்ளனர்.
இதனை எப்படியாவது கண்டறிய வேண்டும் என்ற ஆவலில், அவர்கள் கேட்ட விலைக்கே அந்த வண்டியை வாங்கிக் கொள்வதாக ஒப்புக்கொண்ட ராம்குமார், பணம் எடுத்து வருவதாகக் கூறி விட்டு, காவல்நிலையத்துக்குச் சென்றார். வண்டி குறித்த விவரங்களைக் கூறியுள்ளார். காவல்துறையினர் அவர் பின் போலீஸ் உடையில் இன்றி சாதாரண நபர்களாக உடை அணிந்து ராம்குமாரின் நண்பரைப் போல் கால்டுவெல் காலனிக்குச் சென்றுள்ளனர். அங்கே சென்று, வண்டியை எடுத்து வரச்சொல்லி கேட்டுள்ளனர்.
விற்பனையாளர்கள் அந்த வண்டியைக் கொண்டு வந்ததும் போலீசார் ராம்குமாரின் வண்டிதானா என்பதை மேலும் ஒரு முறை சோதனை செய்தனர். அதில், ராம்குமார் முதல் முதலில் புகார் அளித்த போது கூறிய வாகனத்தின் எண் அடையாளங்களை உறுதி செய்தனர். பின்னர், வண்டியை விற்பதற்காக கொண்டுவந்த சந்தோஷ் என்பவரை சம்பவ இடத்தில் கையும் களவுமாக பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீசார் காவல்நிலையம் கொண்டுவந்து விசாரணை செய்த போது, பண்டாரம்பட்டி கருவேலன் மகன் சந்தோஷ் (வயது.23) என்பதும் , சந்தோஷின் கூட்டாளிகளான கால்டுவெல் காலனியை சேர்ந்த துரைப்பாண்டி மகன் மணி (வயது.23) , ஆசிரியர் காலனியை சேர்ந்த துரை என்பவரது மகன் சரவணன் (வயது.22) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதை அடுத்து, மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
முன்னர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று பார்த்தார் நடிகர் ரஜினிகாந்த்!அப்போது அவரைப் பார்த்து, உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே “யார் நீங்கள்” என கேள்வி எழுப்பினார் சந்தோஷ். இது உடனே, ஊடகங்களில் பெரிதாக காட்டப்பட்டு, சந்தோஷை ஹீரோ லெவலுக்கு ஏற்றி வைத்தன காட்சி ஊடகங்களும், கட்சி ஊடகங்களும்.
இன்று, பைக் திருட்டில் ஈடுபட்டு மாட்டிக் கொண்ட சந்தோஷ் ஓஎல்எக்ஸ் திருடிய வண்டியை விற்க முயன்றுள்ளதைக் கேட்டு பலரும் சிரிக்கின்றனர்.