சினிமா இயக்குனராக இருந்து தனது கற்பனைகளை திரையில் படமாக்கி ரசிகர்களுக்கு மட்டுமே சொல்லிக் கொண்டிருந்த இயக்குனர் சீமான், அவற்றை மேடைகளில் நடித்துக் காட்டி ஆக்ஷனுடன் சொல்லச் சொல்ல… அந்தக் கதைகளை நம்பி ஓர் இளைஞர் கூட்டம் தங்களது மூளைகளை கழற்றி மூலையில் வைத்து விட்டு ஆரவாரித்தது. அந்த ஆரவாரத்தை ஃபுக்குஹ்ஹாஆ என்ற நக்கலான சிரிப்பின் ஒலியில் சீமான் மேடை மைக்குகளில் முழங்க, அதையும் கேட்டு நம்பிக் கொண்டிருந்தது அந்த இளைஞர் கூட்டம்.
அந்தக் கதைகளின் வசனங்களில் ஆமைக்கறியும் துப்பாக்கித் தோட்டாவும் பாத்திரங்களாகவே மாறிப் போயின. சினிமா தயாரிப்பாளரிடம் கதை சொன்னால் ஏதோ ஓரிரு படங்களுக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்கலாம்.,,, ஆனால் எண்ணற்ற ஏமாளி ரசிகர்களின் முன்னால் மேடையில் ஏறிக் கதை சொன்னால், வாய்ப்புகளும் பணமும் கொட்டோ கொட்டொன்று கொட்டும் என்பதைப் புரிந்து கொண்ட சீமான், இப்போது கதைகள் இல்லாமல் மேடை ஏறுவதில்லை! அவரது கதை சொல்லும் திறனைக் கண்டு தம்பிகள் வாய்பிளந்து ஏதோ தேவகுமாரன் ஏசுநாதர் இந்த உலகத்தில் அவதரித்ததே அண்ணன் சீமானால் தான் என்ற ரேஞ்சுக்கு புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறார்கள்.
சீமானின் வஞ்சகத்தையும் துரோகத்தையும் கதை விடும் கற்பனைகளையும் கண்டு விட்ட உலகெங்கும் பரவியிருக்கும் இலங்கை தமிழர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். மலேசியாவில் சீமானின் தொடர்பில் இருப்பவர்களுக்கெல்லாம் அரசு கண்காணிப்பை தீவிரப் படுத்தியிருக்கிறது. ஆனாலும் தமிழகத்தில் தம்பிகளின் மூளைச் சலவை மட்டும் பளிச்சென சலவை ஆகியிருக்கிறது.
சீமானின் வசத்தில் சிக்கிக் கொண்டு சீரழிந்து பின்னர் சுதாரித்துக் கொண்டவர்கள் சிலர். அந்த சிலரில் நடிகை விஜயலட்சுமியும் ஒருவர். சீமானிடம் சிக்கி சின்னாபின்னமான அவர் தனது கண்ணீர்க் கதையை சோக ரசம் பிழிய அவ்வப்போது வீடியோக்கள் மூலம் விளம்பரப் படுத்தித்தான் வருகிறார். ஆனாலும், மீடியாக்களைத் தன் பிடியில் வைத்துள்ள சீமானின் சின்னத் தம்பிகள் விஜயலட்சுமியைக் கண்டுகொள்ளவே யில்லை. அபலைகளின் குரலுக்காகவே எங்கள் மைக்குகள் உயரத் தூக்கிப் பிடிக்கப் படும் என்று கேமராவும் கையுமாக அலையும் ஊகத்தார்களுக்கு ஊடகங்கள் புகலிடமாகப் போய்விட்டதால் உண்மைகள் உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றன.
நடிகை விஜயலட்சுமியோ சற்றும் மனம் தளராமல் தன் அடி வயிற்று ஆத்திரம் அனலாய்ப் பொங்க இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதற்குக் காரணம், சீமானின் சீமாண்டிகள் சீண்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகள்தான்!
அதனைக் குறிப்பிட்டு வெளியிட்ட விஜயலட்சுமியின் ஆத்திரக் குரல் இது…
இந்த நிலையில், வீடியோ வெளியில் விட்ட கையுடன் இன்று சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து ஒரு புகாரைக் கொடுத்தார். மேடைகள் தோறும் என்னை விபச்சாரி என சித்திரித்து பேசிவரும் சீமான் மற்றும் அவரது அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டார்.
வெறும் சினிமா இயக்குனராக இருந்து, அவரது சாதி சார்ந்த அச்சு ஊடகம் தொடக்கத்திலும் பின்னர் அதே குழுமத்தின் காட்சி ஊடகம் கொடுத்த தெம்பிலும், நாம் தமிழர் என்ற அமைப்பின் வழியாக பேசத் தொடங்கி, பின்னர் அரசியல் கட்சியாக மாற்றிக்கொண்டு, தேர்தல்களிலும் போட்டியிட்டார்.
சினிமாக்காரனாக இருந்த போது, ஒரு நடிகையான விஜயலட்சுமியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. அரசியல்வாதியாக மாறிய போது, ஒரு பெரும் அரசியல்வாதியின் வாரிசை திருமணம் செய்தார். இந்நிலையில், நடிகர் சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார் நடிகை விஜயலட்சுமி. அதற்கு ஆதாரமாக காதலர் தினத்தன்று இருவரும் கேக் வெட்டிக் கொண்டாடிய படங்களையும் வெளியிட்டார்.
அதற்கு சிறிது காலத்துக்கு முன்னர்தான், கசமுச கருக்கலில் சீமான் சிந்தாமல் சிதறாமல் சிரிப்பை மூட்டியபடி வசனம் சொன்னதை வெளியிட்டார். அதில், ‘ஏய் பொண்டாட்டி… மாமாவ நல்லவன்னு நெனச்சிராத… நான் கெட்டவன்… கேடு கெட்டவன்டி’ என பேசிய வசனங்கள் வெள்ளித்திரையைக் காட்டிலும் பறந்து, சின்னத்திரை கடந்து, கையகலத் திரையில் காட்சி கண்டது. .
சீமானின் நடிப்பு சீன், சிவாஜியை மிஞ்சி சிகரம் தொட்டது. தம்பிகள் புளகாங்கிதமடைந்தார்கள். அதேநேரம் சிலர் கொலை மிரட்டலும் விடுத்தார்கள் விஜயலட்சுமிக்கு.
இந்நிலையில் தான் விஜயலட்சுமி சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து திங்கள் கிழமை ஒரு புகார் அளித்தார். அதில், சீமான் மற்றும் அவரது கட்சியினர், என்னை விபச்சாரி போல, மேடைகள்தோறும் பேசி வருகின்றனர். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். சீமான் மற்றும் அவரது கட்சியினர் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். மேலும், சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடமும் புகார் அளித்துள்ளார்.
இனி சீமானின் சினிமாக்களில் வருவது போல் போலீஸார் க்ளைமாக்ஸில் வருவார்களா அல்லது ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸுக்கு இணையானவர்கள் என்று பேட்ச் குத்திக் கொண்டு திரிவதை நிரூபிப்பதற்காக களத்தில் இறங்குவார்களா என்பதை தமிழக மக்கள் சின்னத்திரை செய்திகளில் பார்த்துக் கொள்ளலாம்!