- கொரோனா வைரஸ் பாதிப்பு!
- இன்றைய பாதிப்பு: 161 (சென்னை- 138)
- இன்று இல்லம் திரும்பியோர்: 48
- தமிழகம் – 2323 (சென்னை 906)
- தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2323 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை- 161; அவர்களில் சென்னையில் மட்டும் 138 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் சென்னை தொடர்ந்து டேஞ்சர் ஸோன் ஆக இருக்கிறது.
தமிழகத்தில் வியாழக்கிழமை இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உயிரிழப்பு எண்ணிக்கையும் 27 ஆக உள்ளது.
தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில்,
தமிழத்தில் இன்று மேலும் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லை. எனவே உயிரிழப்பு இதுவரை 27 பேர் என்ற நிலையில் உள்ளது.
இன்று ஒரே நாளில் 48 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் மொத்தம் 1258 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1035 பேர் சிகிச்சையில் உள்ளனர். 31,375 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், 40 பேர் அரசுக் கண்காணிப்பிலும் உள்ளனர். இன்று மட்டும் 9,787 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு இல்லாத பகுதியாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இதை அடுத்து அங்கே ஊரடங்கு தளர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதிக்குப் பிறகு வரும் என்று ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
அதே நேரம், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் டாக்டர். பிரதீபாகவுர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சில பகுதிகளில் ஊரடங்கை தளர்த்துவது பற்றி அரசு முடிவு செய்யும் என்றும், ஆனாலும், முழுவதுமாக ஊரடங்கை தளர்த்த முடியாது என்றும் தெரிவித்த அவர், தொடர்ந்து தீவிர கண்காணிப்புக்கு பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப் படும் என்றார்.
முன்னதாக, படிப்படியாக தொழிற்சாலைகளைத் திறக்கலாம் என்று முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார் .
இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளது. ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது.
சென்னை மண்ணடியில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
மண்ணடியில் ஒரு தெருவில், ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் 3 வெவ்வேறு குடும்பங்கள் வசித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு பக்கத்து தெருவில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த ஒருவரின் இறுதி சடங்கிற்கு இந்த அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர்கள் சென்று வந்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் கொரோனா தொற்று 3 குடும்பங்களிலுள்ள 12 பேருக்கு பரவியதாக கூறப்படுகிறது. எனவே அந்தத் தெரு பகுதி தகரங்களால் அடைக்கப்பட்டு கண்காணிப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டு உள்ளனர்