கோவை அவிநாசி சாலையில் தண்டுமாரியம்மன் கோயில் எதிரேயுள்ள மாநகராட்சிக் கட்டிடத்தில் செயல்படும் ஆவின் பாலகத்தில், உணவுப் பாதுகாப்புத் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான 7 சோடா பாட்டில்கள், கலப்பட டீத்தூள், அதிக செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறும்போது, ‘தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதற்காக, பாலக உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடையில் இருந்து 1.20 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள், கலப்பட டீத்தூள் 2.50 கிலோ, முறையான லேபிள் இல்லாத 39 பாக்கெட் தின்பண்டங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.