பஸ்சில் பயணித்து, பொதுமக்களின் குறைகளை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கேட்டறிந்தார். புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனுக்கு, வாட்ஸ் ஆப் வழியாக, புதுச்சேரி – கடலுார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று காலை 10:45 மணிக்கு, கடலுார் சாலை அந்தோனியார் கோவில் சிக்னல் வந்த கவர்னர், அங்கு நின்றிருந்த பாகூர் செல்லும் தனியார் பஸ்சில் திடீரென ஏறி பயணித்தார். அவருடன் கவர்னரின் செயலர் சுந்தரேசன், ஆலோசகர் மகேஸ்வரி, எஸ்.பி., பாஸ்கர்சென்றனர்.பஸ் டிரைவருக்கு அருகில் உள்ள இருக்கையில் கவர்னர் அமர்ந்து, சாலைகளை பார்வையிட்டார். பின், பயணிகளிடம் நலம் விசாரித்து பஸ்கள் சரியான நேரத்திற்கு வருகிறதா என கேட்டார்.
பஸ்கள் வருவதாக மக்கள் கூறினர். சிலர், தங்களுக்கு முதியோர் ஓய்வூதியம் கிடைக்க வில்லை. கிராம சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதாக கூறினர். மக்கள் கூறிய புகார்களை, அதிகாரிகள் குறித்து கொண்டனர்.
எப்போது வேண்டுமானாலும், கவர்னர் மாளிகை வந்து, குறைகளை தெரிவிக்கலாம் என பயணிகளிடம் கவர்னர் கூறினார்.பயணிகள் கோரிக்கை யேற்று தவளக்குப்பத்தில் இருந்து வேறு தனியார் பஸ்சில் அபிேஷபாக்கம் புறப்பட்டார். அங்குள்ள சுடுகாட்டு பாதையை பார்வையிட்டு, மீண்டும் தனியார் பஸ்சில் அபிேஷக பாக்கத்தில் இருந்து மரப்பாலம் சிக்னல் வரை வந்தனர். இரு தனியார் பஸ்களிலும் கவர்னர் மற்றும் அதிகாரிகளுக்கு டிக்கெட் எடுத்தனர்.கவர்னர் கூறுகையில்; மக்கள் தொலைபேசி, வாட்ஸ் ஆப் மூலம் சாலை சரியில்லை என புகார் அளித்தனர். மக்களுடன் பஸ்சில் பயணித்து, உண்மை நிலவரங்களை அறிந்து கொண்டேன்.
சாலை வசதி மட்டுமின்றி, பல புகார்கள், கூறினர். அதிகாரிகள் குறித்து வைத்துள்ளனர். தேர்தல் வருவதால் புது திட்டங்கள் அறிவிக்க முடியாது. நடை முறையில் உள்ள திட்டங்கள் மூலம் குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பொது மக்கள் வரவேற்பு : கவர்னர் பஸ்சில் பயணிப்பதை அறிந்து, அரியாங்குப்பத்தில் பொதுமக்கள் திரண்டு வரவேற்றனர். தவளக்குப்பத்திலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். மீனவ மக்கள் தங்களின் கோரிக்கை குறித்து மனுவாக அளித்தனர். பயணிகள் பலர் கவர்னருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.