நேற்று, 11.04.2021 அன்று, இந்திய நேரப்படி இரவு 20:41:27 மணிக்கு சென்னையிலிருந்து மேற்கு-தென்மேற்கு திசையில் 187 கிலோமீட்டர் தூரத்தில், திருவண்ணாமலைக்கு அருகில், ஒரு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதன் வலிமை 3.0 என்ற அளவில் இருந்தது. தமிழகப் பகுதிகளில் பாறை அமைப்புகள் அமைந்துள்ள விதத்தை நோக்கும்போது இங்கே பாபெரும் நிலநடுக்கங்கள் ஏற்பட வாய்ப்பில்லை.
இதுவரையில் இப்பகுதில் ரிக்டர் அளவுகோலில் 5.1 வரையிலான நிலநடுக்கம் ஒருமுறை பாண்டிச்சேரிக்கு கிழக்கே கடலில் ஏற்பட்டுள்ளது. அதுவே தமிழகப்பகுதிகளில் இதுவரை நிகழ்ந்த வலிமையான நிலநடுக்கம்.
உலகில் ஆண்டுதோறும் சுமார் 14 இலட்சம் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இவற்றுள் 13 இலட்சம் மிக மிக லேசான இரகத்தைச் (வலிமை 2 முதல் 2.9 வரை) சேர்ந்தவை. சுமார் 1.3 இலட்சம் நிலநடுக்கங்கள் மிக லேசான இரகத்தைச் சேர்ந்தவை (வலிமை 3.0 முதல் 3.9 வரை).
சுமார் 13000 நிலநடுக்கங்கள் 4 முதல் 4.9 வரை வலிமை கொண்ட லேசான இரகத்திச் சேர்ந்தவை.
மிதமான வலிமையில் (5 முதல் 5.9 வரை) சுமார் 1300; வலுவான இரகத்தில் (6 முதல் 6.9 வரை) சுமார் 130; அதிக சேதம் தரும் நிலநடுக்கங்கள் (7 முதல் 7.9 வரை வலிமையுள்ள) சுமார் 17; பேரிடர் நிலநடுக்கங்கள் (வலிமை 8.0த்திற்கு மேல்) 1 என்ற அளிவில் ஆண்டுதோறும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
-முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்