மதுரை வைகை ஆற்றில் ஆடி அமாவாசையையொட்டி, தர்ப்பணம் நடைபெற்றது.
அரசு நதிக்கரைகளில் தர்ப்பணம் செய்யக் கூடாது என உத்தரவிட்டிருந்த நிலையில், ஆடி அமாவாசையான இன்று ஏராளமான பொதுமக்கள், மதுரை கோரிப்பாளையம் வைகை ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க குவிந்திருந்தனர்.
முன்னதாக அரசின் நெருக்கடி காரணமாக இன்றைய தினம் முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் உள்ளிட்ட நீத்தார் கடன்களைச் செய்வதற்கு அரசு தடை விதித்துவிட்டதே என்று சமூகத் தளங்களில் பலரும் தங்கள் குமுறல்களைத் தெரிவித்திருந்தனர். அதற்கு ஏற்ப புரோஹிதர்களும் கடந்த வருட கசப்பான அனுபவத்தை நினைத்துக் கொண்டு, தாங்களும் தர்ப்பணம் செய்து வைக்க இயலாது என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மதுரை நகரில் ஆற்றின் கரையோரம் கூடுவதைத் தவிர்த்து, தனியார் ஆலயங்களில் தர்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சமூக இடைவெளியைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து தர்ப்பணம் பலர் கொடுத்தனர்.
வைகைக் கரையோரம் சில இடங்களில் தர்ப்பண நிகழ்வும் நடைபெற்றது.