புகைப்படங்கள் / கட்டுரை: ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
சிறுவயதிலிருந்தே தீராத ஆசை, சிறுசிறு விசேஷங்களில் சிறுமியாய் முதல் வரிசையில் நிற்பேன். என் நிறத்திற்கு
கருப்பு-வெள்ளையில் கொஞ்சம் மங்கலாகவே தெரிந்தாலும் மனம் முழுதும் மகிழ்ச்சி.
நானும் வளர்ந்தேன், என் சிறு வயது ஆசையும் வளர்ந்தது. பெற்றொருக்கு தொந்தரவு கொடுக்க மனமில்லை; அண்ணன்களிடம் கேட்க மனமில்லை. நல்ல புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் ஒருவித புத்துணர்ச்சி.
தெளிவான புகைப்படத்தில் கோணம் சரியாக இல்லையென்றால்
மனதில் ஒரு ஆதங்கம்- எனக்கு இந்த வாப்ப்பு கிடைத்திருந்தால்?
காலம் கடந்தது. எங்கள் இல்லமானது இயற்கையின் மடியில் அமைந்தது – எனக்கு வரமானது!! ஒரு நவராத்திரியில்
வாங்கியே விட்டோம் ஒரு கையடக்க கேமரா!!
காலை 7.30 க்குள் கணவர் அலுவலகம் புறப்பட, குழந்தைகள் பள்ளிக்கூடம் கிளம்பியவுடன், நானும் புறப்பட்டு விடுவேன் புகைப்பட வேட்டைக்கு! மனதிற்கு பிடித்த இயற்கை காட்சிகளை அருமை கோணங்களுடன் எடுக்க கற்றுக் கொண்டேன்.
மூன்றாவது கண்ணே கிடைத்ததாய் உணர்ந்தேன். முதலில் கிண்டல் செய்தவர்களெல்லாம் நல்ல காட்சிகளை காணும் போது என்னை நினைத்துக் கொண்டதாக கூறிய போது மனதில் மகிழ்ந்தேன். ஆங்கில நாளிதழில் பணியாற்றியதால் கிட்டத்தட்ட 70 புகைப்படங்கள் என் பெயரில் வெளிவரும் வாய்ப்பையும் பெற்றேன். பல முறை வயல்களில் கால் கடுக்க நின்றேன்.
தூக்கணாம் குருவியின் கூடு கட்டும் விதத்தைப் பார்த்து, பார்த்து வியந்தேன். ஒரு அற்புத காட்சியை படம் பிடிக்க ஒரு நாள் அரை மணி நேரம் செலவழித்தேன்.
திருவள்ளுவரின் கூற்றான
“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து’
“பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப் போல் அமைதியாக இருக்க வேண்டும், காலம் வாய்த்த போது அதன் குத்து போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்”, என்ற குறளே நினைவில் வந்தது.
பல சந்தர்ப்பங்களில் எடுத்த சூரிய உதயம் முதல் பௌர்ணமி சந்திரன் வரையிலான சில புகைப்படங்களை இங்கே கொடுத்துள்ளேன்.
1) நோபல் பரிசை வென்ற ரவீந்திரநாத் தாகூர்,” தினமும் எழும் சூரியன் ஒன்றானாலும், அதிலிருந்து வரும் கதிர்கள் தினமும் வேறுபடும்,” என்றார். அதனுள் உள்ள அர்த்ததினை உணர இளங்காலை சூரியனை நம் கேமராவில் கைது செய்யும் போது தான் அறிய முடிகிறது.
2) காலையில் நடைப்பயணத்தின் போது படமாக்கிய காட்சி, மனதிற்கு இதமாய் இருந்தது. ஒரு சின்ன அக்கா தன் இரு தம்பிகளுடன் நடுநாயகமாய் சாலையில் நடந்து சென்றாள். ஒரு தம்பியின் கையைப் பிடித்துக் கொண்டும், மறு கையால் தம்பியை அணைத்துக் கொண்டும் ” அனைத்தும் சரியாகி விடும். நம் முன்னால் வாய்ப்புகள் பல!,” எனச் சொல்லுவதைப் போன்ற ஒரு காட்சி.
3) பல வண்ணங்களில் மலர்களை அந்தந்த பருவகாலங்களுக்கு ஏற்ப படைக்கும் இயற்கை அன்னையின் கொடையை என்னவென்று சொல்வது!
4) இயற்கை அன்னையிலிருந்து கற்றப் பாடத்தினால் அடைந்த மன முதிர்ச்சியினால் இரு இளம் தாய் தன் பெண் செல்(வ)லத்தை தன் வேலையிடத்திலேயே டிராக்டரில் உறங்க வைத்து தாலாட்டு பாடும் அழகு.
5) மண்ணினால் செய்யப்பட்ட கூட்டில் தாய்ப்பறவையின் வருகைக்காக வழிமேல் விழி வைத்து காத்திருக்கும் மூன்று குருவிகள்.
6) இங்கேயோ மூன்று தூக்கணாம் குருவிகளில் ஒன்று கூட்டை நோக்கி வர, இரண்டாமவதோ கூட்டை தனக்கே உரிய திறமையான அலகினால் முடித்துப் போட்டு கூட்டினைக் கட்டும் கலையினைத் தொடர மூன்றாவதோ கட்டிய கூட்டை மேற்பார்வை இடுவதுமாய் இருக்கும் காட்சியை படம் பிடித்த அருமை தருணம் இது.
7) “என்னோட அம்மாவைப் பார்த்தீர்களா?, உங்கள் வீட்டிற்கு வந்தாளா, எனக்கு இங்கிருந்து கூட அவள் தெரியவில்லை,” என்கிறதோ இந்தக் குட்டிப் பூனை.
8) இருப்பதை பகிர்ந்து உண்ண கற்றுக் கொடுக்கும் இந்த ஜோடிக் கிளியைப் போன்ற நல்லாசிரியரும் இவ்வுலகில் உண்டோ?
9) அற்புதமான வடிவமைப்பினால் நம் மனதைக் கொள்ளைக் கொள்ளும் இந்த லில்லிப் பூக்கள்.
10) விவசாயிகளின் வியர்வையின் விலையாக நிலமங்கையே பொன்னிற கம்பளமாக கோதுமைப் பயிர்களாய் போர்த்திக் கொண்ட அழகு. தன் புன்னகையை அவள் விவசாயிகளுக்கும் பரப்பட்டும்!!
11) இயற்கையின் ஓவியமாய் நீல வானமும், அடுக்கடுக்கான, பல்வேறு பச்சை வண்ணங்களில் பயிர்களும், தென்னை மரங்களும் நம் கண்ணுக்கு விருந்தாகின்றன.
12) விவசாயம் செய்யவும் வயது ஒரு தடை இல்லை என்பதை உணர்த்திய பின் தன் இல்லம் நோக்கிச் செல்லும் இந்த பேரிளம்பெண்ணின் புன்னகையில் தான் எத்தனை அர்த்தங்கள்!!
13) ஒரு நாளில் நிகழ்ந்த நிகழ்வுகளை அமைதியாய் கிரகித்துக் கொண்டு அதனை காலம் என்னும் ஏட்டில் பதிவு செய்து, அடுத்த நாளுக்கான நம்பிக்கையை விதைத்து, அந்திமாலையில் தன்னை மறைத்துக் கொள்ள தயாராகும் கதிரவன்.
14) மழைக் காலத்தில் கதிரவன் விடைப்பெற்ற பின் வானில் தோன்றும் அழகியப் பதிவுகள் இவை. பச்சை இலைகளும், சிவப்பு பூக்களும் புகைப்படத்தின் பார்டராய் உள்ளன.
15) பௌர்ணமி நிலவினை தாங்கும் பாக்கியம் பெற்ற இலை. இயற்கை தந்த ஸ்டடி லம்ப்.
புகைப்படங்களே கவிதைகளாய், எளிமையாய் வாழ்வியலில் அருமை மருந்தாய் உள்ளது என்றால் மிகையில்லை.