தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இந்த கண்ணாடியை அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரிவர், இது ஒரு மாயக்கண்ணாடி எனக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் தேனி வீரபாண்டி அருகே உள்ள உப்புக்கோட்டையைச் சேர்ந்த அரசமுத்து மற்றும் திவாகர் ஆகிய இருவரும் சேர்ந்து தங்களிடம் கண்ணில் அணிந்தால் எதிரில் இருப்பவர்கள் நிர்வாணமாக தெரியும் மாயக்கண்ணாடி இருப்பதாகக் கூறி கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு விலை பேசி உள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்த யுவராஜ் தன் நண்பர்களான சீனிவாசன், மதன், வரதராஜன் ஆகிய நான்கு நபர்களும் காரில் ஒரு லட்ச ரூபாய் பணத்துடன் மாயக்கண்ணாடி வாங்கும் ஆர்வத்தில் பெரியகுளம் பகுதிக்கு சென்றார்.
அங்கு மாயக்கண்ணாடி இருப்பதாக கூறிய அரசமுத்து மற்றும் திவாகர் மாயக்கண்ணாடி வாங்க வந்த யுவராஜிடம் ஒரு லட்ச ரூபாயை வாங்கி கொண்டு தப்பி ஓடவே யுவராஜ் மற்றும் நண்பர்கள் 4 பேரும் சேர்ந்து அரசமுத்துவை விரட்டிப் பிடித்தனர். ஆனால் பணப்பை திவாகர் வசம் இருந்தது. அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் யுவராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெரியகுளம் வடகரை காவல்நிலையத்தில் அரசமுத்துவை ஒப்படைத்து புகார் கொடுத்தனர்.
இதனை அடுத்து பெரியகுளம் காவல்துறையினர், இருவர் மீதும் வழக்குபதிவு செய்து ஒரு லட்ச ரூபாயுடன் தப்பி ஓடிய திவாகர் என்ற நபரை தேடி வருகின்றனர்.