சிவபெருமானின் பஞ்ச சபைகளில் சித்திர சபையான குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும்.
விஷு திருவிழாவை முன்னிட்டு குற்றாலநாத சுவாமி கோவிலில் நடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது.
திரிகூடநாதர் குற்றாலஎன்றும் நாதர் என்றும் அழைக்கப்படும் இறைவன் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். குழல்வாய் மொழியம்மை சந்நிதியும் சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகார வலமாக வரும்போது அகத்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படும் பராசக்தி பீடம் உள்ளது.
இத்தலத்திலுள்ள தீர்த்தங்களில் வடவருவியும், தேனருவி என்ற சிவமதுகங்கையும் சிறப்புடையவை. வடவருவியில் மூழ்கினாரது பாவம் கழுநீராகப் பிரிந்து ஓடும் என்பது இத்தல ஐதீகம்.
இத்தலத்தின் தலவிருட்சமாக குறும்பலா உள்ளது. இந்த பலா மரத்தில் வருடத்தின் அனைத்து நாட்களிலும், பலா காய்த்துக் கொண்டிருக்கும். இதை யாரும் பறிப்பதில்லை. இந்த பலாவில் உள்ள சுளைகள், லிங்கத்தின் வடிவில் அமைந்திருக்கும்.
குற்றாலநாதர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் சித்திர சபையாகத் திகழ்கிறது. குற்றாலநாதர் கோவிலில் இருந்து சிறிது தொலைவில் தனிக்கோவிலாக அமைந்திருக்கிறது. இதன் எதிரே தெப்பக்குளம் இருக்கிறது. சுற்றிலும் மதில் இருக்க நடுவே சித்திர சபை அமைந்திருக்கிறது.
மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன் கூடிய இந்த சித்திர சபையின் மேற்கூரை சிதம்பரம் நடராஜர் கோவிலின் கூரையை நினைவூட்டுகிறது. இந்த சித்திர சபையில் இரண்டு மண்டபங்கள் இருக்கின்றன.
இந்த கூடத்தின் நடுவே ஒரு சிறு மேடை அமைக்கப்பட்டிருக்கிறது. திருவாதிரை நாளில் நடராஜப் பெருமான் இந்த மேடையில் வந்தமர்ந்து எல்லோருக்கும் காட்சி தருகிறார். கூடத்தின் நான்கு பக்கங்களிலும் அற்புத ஓவியங்கள் அழகுடன் வரையப்பட்டிருக்கின்றன.
சிவபெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்கள் அனைத்தும் சித்திரங்களாக அழகுடன் தீட்டப்பட்டிருகின்றன. கிழக்கு நோக்கியுள்ள இந்த சித்திர சபையின் உள்ளே இருக்கும் நடராஜ சிற்பம் தெற்கு நோக்கியுள்ளது.
குற்றால நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விஷு, ஐப்பசி விஷு திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ஐப்பசி விஷு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள், தாண்டவ தீபாராதனை நடைபெற்று வருகிறது.
கொரோனா காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளும் கோவில் வளாகத்திற்கு உள்ளேயே நடைபெறுகிறது. திருவிழாவின் 7ஆம் நாளான 15ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிவப்பு சாத்தியும், மாலை 7 மணிக்கு வெள்ளை சாத்தி கோலத்திலும் நடராஜர் எழுந்தருளினார்.
அலங்கரிக்கப்பட்ட நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 8ஆம் நாளான 16ஆம் தேதி காலை 10 மணிக்கு சித்திர சபையில் வைத்து நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெற்றது. 18ஆம் தேதி ஐப்பசி விஷு திருவிழா தீர்த்தவாரியுடன் திருவிழா முடிவடைகிறது.