அந்தியூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து திடீரென பாம்பு எட்டிப்பார்க்கவே, இளைஞர் வாகனத்தை கீழே போட்டு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியை சார்ந்த ஜாவித். இவர் இன்று அந்தியூர் பகுதியில் தனது XL இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதன்போது, வாகன முகப்பு விளக்கு பகுதியில் ஒளிந்து இருந்த பாம்பு ஒன்று தனது தலையை தூக்கி காண்பித்துள்ளது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜாவித், வாகனத்தை கீழேபோட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்துள்ளார்.
அவரிடம் விஷயத்தை கேட்டு அவரை அமைதிப்படுத்திய பொதுமக்கள், அருகில் இருந்த தேநீர் கடையில் வெண்ணீர் வாங்கி முகப்பு விளக்கு பகுதியில் ஊற்றியுள்ளனர்.
சூடு தாங்க முடியாத பாம்பு விரைந்து வெளியே வரவே, அது 2 அடி நீளமுள்ள கொம்பேறிமூக்கன் பாம்பு என்பது உறுதியானது. இதனையடுத்து, பொதுமக்கள் பாம்பை வாகனத்தில் இருந்து வெளியே எடுத்து அடித்து கொன்று பால் ஊற்றி புதைத்தனர்.