ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயம் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் முதல் ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் வருவது வழக்கம்.
இவ்வாறு வரும் பறவைகள் இனப்பெருக்கம் செய்த பின்னர் ஏப்ரல் மாதம் மீண்டும் திரும்பி செல்லும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே ராமநாதபுர மாவட்டத்தில் நல்ல மழை பெய்ததால் பறவைகள் சரணாலயத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி காணப்படுகிறது. இதுவரை சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமானபறவைகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் கூழைக்கிடா, கரண்டிவாயன், வெள்ளைநத்தை கொத்தி, செங்கால் நாரை, சாம்பல்நிற நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
எழில் கொஞ்சும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்துள்ள வெளிநாட்டு பறவைகளை காண சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு அடிப்படையான வசதிகள் செய்துதர வேண்டும் என சூழிலியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.