இந்தியாவில் மின் வாகனங்களுக்கு மவுசு தொடர்ச்சியாகக் கூடிக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகன விற்பனை பன் மடங்கு உயர்ந்துக் காணப்படுகின்றது.
கடந்த 2021ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்தமாக 2,33,971 யூனிட் மின்சார டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.
எந்த வருடத்திலும் இல்லாத மிக அதிகளவிலான விற்பனை வளர்ச்சி இதுவாகும். மிக தெளிவாகக் கூற வேண்டும் என்றால் 132 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்திய மின் வாகன சந்தை போன வருடம் பெற்றிருக்கின்றது.
இதேபோல், எலெக்ட்ரிக் கார் மற்றும் ஆட்டோக்களின் விற்பனையும் கடந்த ஆண்டில் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மின் வாகனங்களை மையமாகக் கொண்டு ஓர் நிறுவனத்தின் மீது பிரபல நடிகர் ஒருவர் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகர் வெங்கடேஷ் டகுபதி இவரே மின் வாகனத்தை மையமாகக் கொண்டு பல்வேறு சேவைகளை செய்து வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்.
தெலுங்கு மட்டுமின்றி தமிழ் போன்ற இந்தியாவின் பிற மொழி திரைப்படங்களில் நடித்தவர் வெங்கடேஷ் டகுபதி.
ஆகையால், தென்னிந்தியாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இவர் காட்சியளிக்கின்றார்.
மின்சார வாகனங்களின் பக்கம் பிரபல தொடர்ச்சியாக ஈர்க்கப்பட்டு வருகின்றனர். அண்மையில், த்ரிஷ்யம் திரைப்பட இயக்குநர் ஜீது ஜோசப், எம்ஜி இசட்எஸ் இவி மின்சார கார் மற்றும் டிவிஎஸ் ஐ க்யூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்பாட்டிற்கு வாங்கினார்.
இவருக்கு முன்னதாக பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல பெண் இயக்குநர் கிரண் ராவ், பஜாஜ் சேத்தக் மின்சார ஸ்கூட்டரை வாங்கினார்.
இவ்வாறு பிரபலங்கள் பலர் மின் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கியிருக்கின்ற இந்த நிலையிலேயே ஒரு படி மேலே சென்று நடிகர் வெங்கடேஷ் டகுபதி மின் வாகனத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனத்தின் மீது முதலீடு செய்திருக்கின்றார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் பைக்வோ (BikeWo). இந்நிறுவனத்தின் மீதே நடிகர் முதலீடு செய்திருக்கின்றார்.
மேலும், நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராகவும் அவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஆகையால், இனி வரும் காலத்தில் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளின் விளம்பரத்திலும் அவர் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பைக்வோ நிறுவனம், மின் வாகனம் சார்ந்த சேவைகள் மற்றும் சார்ஜிங் நெட்வொர்க்குகளை விரைவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவனத்தின் தயாரிப்புகள் வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.
அந்தவகையில் புதிதாக 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் நாடு முழுவதும் பேன்-இந்தியா திட்டத்தின்கீழ் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன.
2025ம் ஆண்டிற்குள் இவற்றை செய்து முடிக்க நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. தற்போது பைக்வோ நிறுவனத்தின்கீழ் 25 மின் வாகன சார்ஜிங் மையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இத்துடன், 250 விற்பனையகங்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அனைத்தும், ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களை மட்டுமே மையமாகக் கொண்டு பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இவற்றையே மிக விரைவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டிலேயே பைக்வோ நிறுவனம் செயல்படத் தொடங்கியது. ஆகையால், இந்தியாவில் முளைத்த புதுமுக நிறுவனமாக இது கருதப்படுகின்றது.