விமான சேவைகளை மேம்படுத்த புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கிடையே தொடர்பு கொள்வதற்காக, வாக்கி – டாக்கி சேவை பயன்படுத்தப்படுகிறது.
டி.எம்.ஆர்., எனும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ வசதி, சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தொலை தொடர்பு சேவை ‘டெட்ரா’ என்ற ஐரோப்பா தொழில்நுட்பத்தில், முழுவதும் டிஜிட்டல் வடிவில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை விமான முனையம் மற்றும் விமான ஓடுபாதைகளில், தடையில்லா சேவை கிடைப்பதற்காக, இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல், விமான நிறுவனங்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என அனைவருக்கும், இந்த சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, அந்தந்த நிறுவனங்கள் தனித் தனியாக, மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் ‘டிரங்கிடு ரேடியோ சேவை’ மூலம் இணைப்புகள் வழங்கப்படும்.
இந்த கருவிகளின் அலைவரிசையை வெளிநபர்கள் யாரும் ஒட்டு கேட்க முடியாது. மேலும் இதில், பேசும் தகவல்கள் அந்தந்த அதிகாரிகள், ஊழியர்கள் மட்டும் பதிவு செய்து கொள்ளும் வசதிகளும் உள்ளன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த புதிய தொழில்நுட்ப வசதிகள் மூலம் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள், வருகை, புறப்பாடு உள்ளிட்டவை மேலும் மேம்படும் என்று கூறப்படுகிறது.