தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி திருக்கோவில் வைகாசி திருவிழா இம்மாதம் 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான கருடசேவை காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்திலிருந்து பெருமாள் தங்க கருட வாகனத்தில் அலங்காரமாகி திருக்கோவில் ராஜகோபுரம் முன்பாக சோளிங்கரை சேர்ந்த பெருமாள் பக்தரான தொட்டியாச்சாரியாருக்கு தரிசனம் தந்தார்.
பின்னர் வீதியுலாவாகப் புறப்பட்டு விளக்கொளி பெருமாள் கோவில் தெருவில் உள்ள தேசிகர் சன்னதிக்கு சென்றதும் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பெருமாள் நகரின் முக்கிய வீதிகள் முழுவதும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருட சேவைக் காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் காஞ்சிபுரம் வந்திருந்து பெருமாளை சேவித்தனர்.
சுமார் 50க்கும் மேற்பட்ட பஜனைக் கோஷ்டியினர் பக்தி இசைப் பாடல்களை பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் பரவசமாக நடனம் ஆடிக்கொண்டே பெருமாளின் பின்புறம் வரிசையாக வந்தனர்.
கருட சேவையை முன்னிட்டு நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தன்னார்வ அமைப்புகள், பக்தர்கள் பலரும் அன்னதானமும், நீர்மோரும் வழங்கினார்கள். விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.
வழிநெடுகிலும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பலரும் ஆரத்தி காண்பித்து வழிபட்டனர்.