பள்ளிக் கட்டணம் கட்டுவதற்கு பணமின்றி நாகப்பட்டினத்தில் குடும்பமே தற்கொலை செய்து கொண்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தில் தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாவது படிக்கும் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த இயலாததால் மாணவனுடன் பெற்றோரும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
நாகை வெளிபாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 35 வயதாகும் இவர் நகைக் கடை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (வயது 30). இவர்களது ஒரே மகன் ஜெகதீஷ் (10 வயது) நாகையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்
குறைந்த வருவாய் என்பதால் ஏற்கெனவே பல இடங்களில் கடன் வாங்கி மகனின் கல்விக் கட்டணத்திற்கு பணம் செலுத்தியுள்ளார்! ஆனால் இந்த வருடம் மகனுக்கு கல்விக் கட்டணம் செலுத்த பணம் கிடைக்காமல் மன வேதனையில் இருந்துள்ளார் செந்தில்குமார்!
பள்ளி திறந்து பத்து நாட்கள் ஆகியும் கல்விக் கட்டணம் செலுத்தாததால் பள்ளி நிர்வாகம் கட்டணம் செலுத்த வலியுறுத்தி உள்ளது! இதனால் நாள்தோறும் வீட்டுக்கு சென்றதும் பள்ளிக் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோரிடம் ஜெகதீஷ் அழுதுள்ளான்.
படித்து போலீசாக ஆசைப்பட்ட தன் மகனுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்த வழியில்லாமல் இருக்கிறதே என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் புலம்பியுள்ளார் லட்சுமி!
இந்நிலையில் தன் மகனுக்கு போலீஸ் உடை அணிவித்து நேற்று மதியம் அழகு பார்த்த அந்தத் தம்பதி எலி மருந்தைக் கரைத்து குடித்து மகனுக்கும் கொடுத்து தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர்!
மதியம் வீட்டிற்கு சென்ற செந்தில்குமார் நகைக் கடைக்கு வேலைக்கு திரும்பாததால் கடை உரிமையாளர், கடையில் வேலைபார்க்கும் ஒருவரை செந்தில் குமாரின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் வந்து பார்த்த போது மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது!
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவம் குறித்து வெளிப்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தனியார் பள்ளியில் பிடுங்கும் கட்டணக் கொள்ளையால், தங்கள் மகனின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த வழியின்றி ஒரு குடும்பமே தற்கொலையில் ஈடுபட்டுள்ளதால் தனியார் பள்ளிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் குரல் எழுப்பப்பட்டு வருகிறது!
நீட் தேர்வு எழுத இயலாமல் மதிப்பெண் பெற வழியின்றி ஓரிருவர் உயிரிழந்ததை அடுத்து நீட் தேர்வு வேண்டாம் என்று போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள், தனியார் பள்ளிக் கட்டணம் செலுத்த வழியின்றி ஏழை ஒருவர் தனியார் பள்ளியின் நெருக்குதலுக்கு ஆட்பட்டு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதால் தனியார் பள்ளிகளே வேண்டாம்; தனியார் பள்ளிகள் அனைத்தையும் மூடுங்கள் என்று குரல் கொடுத்து போராட்டம் நடத்துவரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர்!