கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான சூழலுக்கு அழைத்து செல்லப் படுகின்றனர். மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலைகள் துண்டிக்கப் பட்டுள்ளன. இதையொட்டி தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் அதிகப்படியான மழையால், கபினி, கே.ஆர்.எஸ், கிருஷ்ண ராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பத் தொடங்கியுள்ளன. அணையின் பாதுகாப்பு கருதி, தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இதனால் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்தடைகிறது. பொங்கி வரும் காவிரியால், ஒகேனக்கல் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது நீர்வரத்து வினாடிக்கு 2 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 5வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கிறது. தற்போது அணை நீர்மட்டம் 73.50 அடியாக இருக்கிறது. இதையடுத்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.