சிஷ்யர்: சாஸ்திரங்கள் மறுபிறவி இருக்கிறது என்று கூறுகின்றன. இதற்கு ஏதாவது யுக்திகளும் இருக்கின்றனவா?
ஆச்சாரியாள்:
பலவிதமான யுக்திகள் இருக்கின்றன. உலகத்தில் ஒருவன் துன்பப்படுகிறான். மற்றொருவன் சந்தோஷமாக வாழ்கிறான். இதற்கு காரணமென்ன இந்தப் பிறவியில் செய்த கர்மாக்கள் காரணமாக பலன் இல்லாவிட்டாலும் சிலர் துன்பங்களையும் மற்ற சிலர் இன்பங்களையும் அடைய காரணம் என்ன? சிறு குழந்தைகளிடம் இது போன்ற நிலை இருப்பதை பார்க்கிறோம். இதற்கெல்லாம் பதில் கூற மறுபிறவி என்ற ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும்.
சென்ற பிறவியில் நாம் செய்த செயல்களின் விளைவாகவே நாம் துன்பங்களையும் புண்ணியச் செயல்களின் பலனாக நாம் இன்பங்களையும் தற்போது அனுபவிக்கிறோம் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும். மேலும் சில மக்கள் தமது முற்பிறவியைப் பற்றிய ஞாபகம் பெற்றிருக்கிறார்கள். சில விஞ்ஞானிகளும் இது விஷயமாக ஆராய்ச்சி செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். முற்பிறவி ஞாபகம் செய்து கொண்ட சிலர் சில நிகழ்ச்சிகளையும் சில காட்சிகளையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் நிரூபிக்கப்பட்டுகின்றன.
நமக்கு அனுபவம் என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் தற்போது ஞாபகம் என்பது எப்படி வரும் ஆகவே இதற்கு முன்பு ஒரு பிறவி பெற்றியிருந்து அதில் அனுபவங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நம் சாஸ்திரங்கள் சில நோய்கள் நீங்குவதற்காக சிலர் பிராயசித்தங்களை கூறுகின்றன மேலும் முற்பிறவியில் செய்த சில பாவசெயல்கள் பற்றியும் பிராயச்சித்தம் கூறுகின்றன. பிராயச்சித்தம் செய்தால் தீர்ந்து விடுகின்றன. முற்பிறவியில் செய்த பாவ செயல்களுக்கான பிராயச்சித்தங்கள் முற்பிறவி என்பதே இல்லாமல் இருந்தால் வியாதியை எப்படி போக முடியும். வெறும் சிரத்தை தான் காரணம் என்றால் சிரத்தையுடன் அறியாமையினால் தவறான வழியில் செய்தால் அவை பலன் அளிப்பதில்லை என்பதையும் நாம் பார்க்கிறோம். பிறகு அந்த நோய்களும் குணமடைவது இல்லை.
சில குழந்தைகள் சிறு வயதிலேயே சில சாமர்த்தியங்கள் காட்டுகின்றன. அவை இப்பிறவியிலேயே சிறுவயதில் அவ்வளவு சாமர்த்தியங்களையும் பெற்றுக் கொண்டிருக்க முடியாது. குழந்தையின் தந்தை தாத்தா முதலியவர்கள் இடத்தும் இவ்விதமான திறனை நாம் காணாமல் இருந்திருக்கலாம். இதிலிருந்து குழந்தைக்கு முற்பிறவியில் இருந்து தான் இந்த சாமர்த்தியம் வந்திருக்க வேண்டும் என்று நமக்கு தெரிகிறது.
மறுபிறவி என்பதை நாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் இறைவன் பாரபட்சமாக நடந்து கொள்கிறான் என்று தான் முடிவுக்கு வரவேண்டி இருக்கும். சிலருக்கு இறைவன் இன்பத்தையும் மற்றவர்களுக்கு துன்பத்தையும் அளித்திருக்கிறான். மேலும் இறைவனுக்கு கருணையை கிடையாது. ஏனெனில் சிலர் எப்போதும் துன்பத்தையே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் இம்மாதிரி இறைவனைப் பற்றிக் கூறுவதை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மறுபிறவி இருப்பதையே ஒப்புக்கொள்வார்கள்.
பிறந்த குழந்தை யாரும் ஒன்றும் சொல்லிக் கொடுக்காமல் இருந்தாலும் அது தாயின் பால் குடிக்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில் இருந்து திருப்தி கிடைக்கும் என்ற அறிவு அதற்கு இருந்திருக்கவேண்டும். பிரயோஜனம் என்பது இல்லாமல் முட்டாள் கூட ஒரு செயலில் ஈடுபட மாட்டார். தாய்ப்பாலை குடிக்க முயற்சி செய்யும் குழந்தைக்கும் அதிலிருந்து திருப்தி உண்டு என்ற அறிவு இருந்திருக்க வேண்டும். அத்தகைய அறிவு இப்பிறவியில் ஏற்பட்டிருக்க முடியாது. ஏனென்றால் இதற்கு முன் குழந்தை இப்பிறவியில் தாய்ப்பால் குடிக்கவில்லை. ஆகவே அந்த அறிவை குழந்தையின் முற்பிறவியில் தான் அடைந்திருக்க வேண்டும். இதுவும் மறுபிறவி இருந்ததைக் காட்டுகிறது.
மறுபிறவி என்பதை நாம் ஒப்புக் கொள்ளாமல் இருந்தால் மனிதன் இறந்த பிறகு அவன் எப்போதும் சுவர்க்கத்தில் அல்லது நரகத்திலோ வாழ்வான் என்று கூற வேண்டிவரும். இது சரியாகுமா? ஏனெனில் எதற்கு ஆரம்பம் இருக்குமோ அதற்கு முடிவும் இருக்க வேண்டும். சொர்க்கத்தில் போய் வாழ்வது என்ற நிலைமை எடுத்துக்கொண்டால் ஆரம்பித்த சொர்க்கத்திற்கு ஒரு முடிவு இருக்க வேண்டும். மேலும் ஒரு விதமான பாவமோ புண்ணியமோ செய்யாத ஒரு குழந்தை இறந்த பின் எங்கு செல்லும்? என்ற கேள்வி எழும் இதற்கு பதிலாக நரகம் என்று சொன்னால் செய்யாத குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்க வேண்டும் என பொருள் வரும். சொர்க்கமே என்று சொன்னால் அதற்கும் செய்யாத புண்ணியங்களுக்கு பலன் கிடைக்கிறது என்று பொருள் வரும் ஆகவே புண்ணியமும் பாவமும் செய்யாத ஒரு குழந்தை இறந்தால் சொர்கத்திற்கு தான் செல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பிறந்தஉடன் கொன்று விடலாம் அல்லவா? அப்படி செய்தால்தான் அது எப்போதும் சொர்க்க இன்பம் அனுபவிக்கும் என்பதற்காக கொன்று விடலாம் அல்லவா?
நாம் மறுபிறவியை ஒப்புக் கொள்ளவில்லை என்றால் இது போன்ற பைத்தியக்காரத்தனமான கருத்து தான் கிடைக்கும்.
நான் மேற்கூறியவை சில காரணங்களே மேலும் பல காரணங்கள் உள்ளன. அத்தகைய உத்திகளாலும் மறுபிறவி என்பது உண்டு என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.