வள்ளலார் அருளிய தனித்திருமாலை
திங்கள்அம் கொழுந்து வேய்ந்த செஞ்சடைக் கொழுந்தே போற்றி
மங்கை வல்லபைக்கு வாய்த்த மகிழ்நநின் மலர்த்தாள் போற்றி
ஐங்கர நால்வாய் முக்கண் அருட்சிவ களிறே போற்றி
கங்கையை மகிழும் செல்வக் கணேசநின் கழல்கள் போற்றி. (1)
உலகம் பரவும் பொருள் என்கோ என் உறவென்கோ
கலகம் பெறும் ஐம்புலன் வென்றுயரும் கதி என்கோ
திலகம் பெறுநெய் என நின்றிலகும் சிவம் என்கோ
இலகைங்கர அம்பர நின் தனை என் என்கேனே. (2)
அடியார் உள்ளம் தித்தித் தூறும் அமுதென்கோ
கடியார் கொன்றைச் செஞ்சடை யானைக் கன்றென்கோ
பொடியார் மேனிப் புண்ணியர் புகழும் பொருள் என்கோ
அடிகேள் சித்தி விநாயக என் என்றறைகேனே. (3)
கமலமலர் அயன் நயனன் முதல் அமரர் இதயம் உறு கரி சகல அருள்செய் பசுபதியாம்
நிமலநிறை மதியின் ஒளிர் நிரதிசய பரமசுக நிலையை அருள் புரியும் அதிபதியாம்
விமல பிரணவ வடிவ விகடதட கடகரட விபுலகய முகசுகுண பதியாம்
அமலபர சிவஒளியின் உதயசய விசயசய அபய எனும் எமது கணபதியே. (4)
அம்பொன்று செஞ்சடை அப்பரைப் போல்தன் அடியர்தம் துக்கம் பொன்றும் வண்ணம் கருணைசெய் தாளும் கருதுமினோ
வம்பொன்று பூங்குழல் வல்லபையோடு வயங்கிய வெண்
கொம்பொன்று கொண்டெமை ஆட்கொண்டருளிய குஞ்சரமே. (5)
திருமால் வணங்கத் திசைமுகன் போற்றச் சிவமுணர்ந்த
இரு மாதவர் தொழ மன்றகத் தாடு மிறைவடிவாக்
குரு மாமலர்ப் பிறை வேணியு முக்கணுங் கூறுமைந்து
வருமா முகமுங்கொள் வல்லபை பாகனை வாழ்த்துதுமே. (6)